எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை நிதிஷ் குமார் தொடங்கி வைத்த பின் நடந்த பரபரப்பு சம்பவம்... என்னனு தெரியுமா?
பீஹாரில் எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 புதிய எலெக்ட்ரிக் தாழ் தள பேருந்துகளின் சேவையை பீஹார் மாநில அரசு தொடங்கியுள்ளது. பீஹார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார், இந்த புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை கடந்த திங்கள் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நிதிஷ் குமார் கூறுகையில், ''பாட்னா நகரில் நாங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. அத்துடன் கார்பன் உமிழ்வு இல்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கு நட்பாகவும் உள்ளன. எனவே சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்வது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்தோம்.

இதன்படி தற்போது 12 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார். பாட்னா-ராஜ்கிர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும், பாட்னா-முஸாஃபர்பூர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எஞ்சிய 8 எலெக்ட்ரிக் பேருந்துகளும் பாட்னாவின் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.

இதற்கிடையே எலெக்ட்ரிக் பேருந்துகள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பிறகு, பீஹார் சட்டசபை வளாகத்தில் ஒரு பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை கீழே இறக்கி விட்ட பிறகு, சட்டசபை ரவுண்டானாவில் அந்த பேருந்தின் ஓட்டுனர் யு-டர்ன் எடுக்க முயன்றார். அப்போது பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பான பகுதி என்பதால், இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சிறிய விபத்துதான். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே பீஹார் மாநிலமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் வேகமாக செயல்பட தொடங்கியுள்ளது.

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், மத்திய அரசும், டெல்லி, குஜராத், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில் டெல்லி மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications








