உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் டாக்டர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சிறப்பு சலுகை... என்னனு தெரியுமா?
உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் டாக்டர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்டது. முதல் அலை ஓய்ந்த அடுத்த சில மாதங்களில் இரண்டாவது அலை ஏற்பட்டு விட்டது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட டாக்டர்களை கௌரவிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ, மினி கார்களை வைத்துள்ள டாக்டர்களும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்கை வைத்துள்ள டாக்டர்களும், இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனமும், அதன் டீலர் பார்ட்னர்களும் இணைந்து இந்த சலுகையை வழங்குகின்றனர். இதன்படி பிஎம்டபிள்யூ, மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளுக்கு, இலவசமாக இன்ஜின் ஆயில் சர்வீஸ் செய்யப்படவுள்ளது. இந்த சலுகையை வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை டாக்டர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா கூறுகையில், ''கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மருத்துவர்கள் சமூகம் ஓய்வின்றி உழைத்து கொண்டுள்ளது. எண்ணற்ற நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தங்களுடைய முயற்சிகள் மூலம் ஏராளமான உயிர்களையும் காப்பாற்றி வருகின்றனர்.

எனவே மருத்துவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, அவர்களின் பிஎம்டபிள்யூ, மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளுக்கு இன்ஜின் ஆயில் சர்வீஸ் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் மனித நேயத்தை நிலை நாட்டுவதுடன், கடமை உணர்வுடன் செயல்படும் மருத்துவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வரும் நிலையில், மறுபக்கம் தொழில்கள் முடங்கியுள்ளன. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் தற்போது வாகன டீலர்ஷிப்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டை போல் தற்போதும் வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு காரணமாக வாகன உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசியாவின் டெட்ராய்டு என வர்ணிக்கப்படும் சென்னையில் பல்வேறு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில வாகனங்களின் காத்திருப்பு காலம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








