விலை மிக மிக அதிகமாச்சே... இவ்ளோ பாதுகாப்பை தரலனா எப்படி? எமனுக்கே சவால் விடும் பாதுகாப்பு திறன்!
அடுத்த வாரம் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விற்பனைக்கு வரவிருக்கும் கார் மாடலே பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX). இந்த காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) மிக விரைவில் இந்தியாவிற்கான தனது முதல் மின்சார காராக ஐஎக்ஸ் (BMW iX) எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. அடுத்த வாரம் இதன் அறிமுகம் நமது நாட்டில் அரங்கேற இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துவிட்டது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மின்சார காரின் பாதுகாப்பு திறன் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. இக்காரை யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பு அண்மையில் மோதல் (க்ராஷ்) ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் மின்சார காரானது ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

இதன் வாயிலாக பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய வாகனமே அடுத்த வாரம் இந்திய மின்சார சொகுசு கார்கள் சந்தையில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

தற்போது இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் இ-ட்ரான் எனும் மாடலில் அதன் எலெக்ட்ரிக் கார்களையும், பென்ஸ் நிறுவனம் இக்யூசி எனும் மாடலில் எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றிற்கு போட்டியளிக்கும் வகையிலேயே ஐஎக்ஸ் சொகுசு எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

மேலும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட முதல் மின்சார சொகுசு கார் என்ற மகுடத்துடன் இக்கார் நம் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அனைத்து விதமான ஆய்விலும் இந்த கார் உச்சபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றது. அதாவது, மோதலின்போது காயங்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் காரில் இடம் பெற்றிருக்கும் ஏர் பேக்குகள் துரிதமாக செயல்பட்டிருக்கின்றன.

இதன் அடிப்படையிலேயே பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மின்சார காருக்கு யூரோ என்சிஏபி ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றது. பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறியவர்களும் மிகுந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சிறியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்விலும் மிக சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை ஐஎக்ஸ் பெற்றிருக்கின்றது.

தொடர்ந்து, பயணிகளுக்கு மட்டுமின்றி வெளிப்புறத்தில் இருப்பவர்களுக்கும் எந்த தீங்கும் இந்த கார் விளைவிக்காது என்பது தற்போது மோதல் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது, மோதல் ஏற்படுவதற்கு முன்னரே அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும் வகையில் எச்சரிக்கை சிஸ்டம் காரின் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவே, பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வண்ணம் செயல்படும். இத்துடன், கூடுதல் சிறப்பு அம்சமாக தானியங்கி பிரேக்கிங் சிஸ்டமும் ஐஎக்ஸ் காரில் இடம் பெற்றிருக்கின்றது. இதுவும், மோதல் ஏற்படுத்துவதற்கு முன்னரே வாகனத்தின் இயக்கத்தை நிறுத்த உதவும். ஆகையால், மிக பாதுகாப்பான பயணம் இதன் வாயிலாக உறுதியாக கிடைக்கும் என்பது தெரிகின்றது.

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரையே பிஎம்டபிள்யூ நிறுவனம் வரும் 13ம் தேதி விற்பனைக்கான அறிமுகம் செய்ய இருக்கின்றது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (Completely Built Unit) இந்த மின்சார கார் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இரு விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.
எக்ஸ்-டிரைவ் 40 மற்றும் எக்ஸ்-டிரைவ் 50 ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதில், எக்ஸ்-டிரைவ் 40 வேரியண்டில் 326 எச்பி மற்றும் 630 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் மின் மோட்டாரும், எக்ஸ்-டிரைவ் 50 வேரியண்டில் 523 எச்பி மற்றும் 765 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இதேபோல் இரண்டின் ரேஞ்ஜின் திறனும் மாறுபட்டு காட்சியளிக்கின்றது. எக்ஸ்-டிரைவ் 50-இன் உச்சபட்ச ரேஞ்ஜ் 611 கிமீட்டராகவும், எக்ஸ்-டிரைவ் 40-இன் அதிகபட்ச ரேஞ்ஜ் 414 கிமீட்டராகவும் இருக்கின்றது. இத்தகைய சூப்பர் திறன்களுடனேயே பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் மிக விரைவில் இந்திய மின்சார வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








