பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார கார் அதிகாரப்பூர்வ வெளியீடு... இதன் ரேஞ்ஜ் திறன் எவ்வளவு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!!
பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார காரை நிறுவனம் முதல் முறையாக வெளியீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, இக்காரின் சிறப்பு திறன்கள்குறித்த தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, அதன் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ ஐ4 எனும் பெயரிலேயே எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இது ஓர் செடான் ரக மின்சார வாகனம் ஆகும்.

இன்று (மார்ச் 17) பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே புத்தம் புதிய ஐ4 மின்சார் காரை நிறுவனம் வெளியீடு செய்தது. இத்துடன், மின்சார கார் குறித்த சில முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களையும் நிறுவனம் வெளியிட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலில் அனைவரையும் கவரும் வகையில் காரின் ரேஞ்ஜ்குறித்த விபரம் அமைந்துள்ளது. பிஎம்டபிள்யூ ஐ4 எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 590 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் பிஎம்டபிள்யூ சொகுசு கார் பிரியர்களை மட்டுமின்றி மின் வாகன ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கின்றது. இது ஓர் நான்கு கதவுகள் கொண்ட கிராண் கூபே ரக மின்சார வாகனமாகும். இதனை நிறுவனம் இப்போதே முதல் முறையாக இவ்வுலகில் காட்சிப்படுத்தியுள்ளது.

காரின் உருவத்தைப் போலவே இதன் மின் மோட்டாரும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதன் ஆக்சலரேஷன் திறன் இருக்கின்றது. இந்த கார் வெறும் 4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என பிஎம்டபிள்யூ தெரிவித்திருக்கின்றது.

பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறங் இருக்கின்றது. இடிரைவ் 35, இடிரைவ்40 மற்றும் எம்50 ஆகிய மூன்று தேர்வுகளிலேயே கார் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இதில், எம்50 தேர்வே உயர்நிலை வேரியண்டாகும்.

இதுவே உச்சபட்ச ரேஞ்ஜ் மற்றும் சிறப்பு சொகுசு அம்சங்கள் பலவற்றுடன் களமிறங்க இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, 2022ஆம் ஆண்டில்தான் இக்கார் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார காரில் 530 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐடிரைவ் 8 தொழில்நுட்பம், 14.9 இன்சிலான தொடுதிரை, 12.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்காரின் கேபினை அலங்கரிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலே பார்த்த இந்த முக்கிய தகவல்களை மட்டுமே தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இன்னும் பல முக்கிய தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலையும் நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியாகியிருக்கும் புகைப்படத்தை வைத்து பார்க்கையில் பிஎம்டபிள்யூ 4 செரீஸ் கிராண் கூபை காரின் தோற்றத்தை ஒத்த மாடலை ஐ4 மின்சார கார் பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. ஆனால், இக்காரின் முகப்புக பகுதி கிரில் மற்றும் உடல் பகுதியில் இடம்பெற்றிருக்கும் லைன்கள் காருக்கு மேலும் ஸ்போர்ட்ஸ் தோற்றத்தைச் சேர்க்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற கணிசமான வித்தியாசங்களே இரு கார்களுக்கும் இடையில் தென்படுகின்றன. உலகம் முழுவதும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டாடா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதன் மின்சார கார்களைக் களமிறக்கிவிட்டன.

இதனைத் தொடர்ந்து மேலும் சில நிறுவனங்களும் அதன் எலெக்ட்ரிக் கார்களை நாட்டில் களமிறக்க தயராகி வருகின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ4 மின்சார காரை நமது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








