முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
இந்த ஆண்டு 25 புதிய மாடல்களுடன் இந்தியாவில் சரவெடி கொளுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய சொகுசு கார் சந்தையில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. விற்பனையில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல புதிய மாடல்களை இரு நிறுவனங்களும் அறிமுகம் செய்வதற்கு தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், இன்று புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் சொகுசு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது பிஎம்டபிள்யூ. இதனைத் தொடர்ந்து ஏராளமான புதிய கார் மாடல்களை வரிசைக் கட்டுவதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா,"கடந்த ஆண்டு வர்த்தகத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. பல மாதங்கள் வர்த்தக நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கின.

இந்த நிலையில், கார் சந்தை மெல்ல எழுச்சி கண்டு வருகிறது. இந்த ஆண்டு 12 மாதங்களும் முழு அளவில் வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறும். இதனால், இந்த ஆண்டு மிக வலுவான விற்பனையை வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

வர்த்தகத்தை வலுவாக கொண்டு செல்லும் வகையில் 25 புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறோம். இதில், 8 புத்தம் புதிய கார் மாடல்கள், 9 ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்கள் மற்றும் 8 புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இதுவரை இல்லாத ரகத்திலான புதிய கார் மாடல்களையும் கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளோம," என்று தெரிவித்துள்ளார்.

பிஎம்டபிள்யூ இந்தியா குழுமத்தின் கீழ் பிஎம்டபிள்யூ கார்கள், மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








