ரொம்ப சந்தோஷம்யா! பெட்ரோல் நிறுவனங்கள் எடுத்த சூப்பரான முடிவு! அடுத்தடுத்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்திகள்!
பெட்ரோலிய நிறுவனங்கள் சூப்பரான முடிவை எடுத்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு அதிரடியாக குறைத்தது.

அத்துடன் மாநில அரசுகளும் தங்களது வாட் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதன் பேரில் பல்வேறு மாநில அரசுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. எனவே இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்துள்ளது. இந்த சூழலில், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி இந்தியாவில் தற்போது உள்ள பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களும் அதிரடியாக முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட் எதிர்காலத்தில் முக்கியமான ஒன்றாக மாறும் என்பதால் எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. பெட்ரோல் பங்க்குகளில் அடுத்த சில ஆண்டுகளில் 7 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 19 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தொழில் வாய்ப்பாக கருதுகிறது.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் அருண் குமார் சிங் கூறுகையில், ''வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அடுத்த சில ஆண்டுகளில் 7 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளோம். இவை 'எனர்ஜி ஸ்டேஷன்கள்' என அறியப்படும்'' என்றார்.

அதே நேரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தடையற்ற பயண அனுபவம் உறுதி செய்யப்படும். மேலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதற்கும் இது ஊக்கம் அளிப்பதாக அமையும்.

தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 448 சார்ஜிங் ஸ்டேஷன்களும், 30 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களும் உள்ளன. இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா கூறுகையில், ''நாங்கள் முதற்கட்டமாக 9 நகரங்களில் கவனம் செலுத்தவுள்ளோம்.

இதில், மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, சூரத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் அடங்கும். இதன்பின் சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க்கை படிப்படியாக அதிகரிப்போம். இதன்படி மாநில தலைநகரங்கள், ஸ்மார்ட் சிட்டிகள் மற்றும் இந்த நகரங்களை இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வே சாலைகளிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும்'' என்றார்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் அவர்களது மனதில் பெரிய தயக்கமும் இருக்கிறது. எனினும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் நடவடிக்கையால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை உயரவுள்ளது.

எனவே பொதுமக்கள் பலர் தயக்கம் இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு நல்லது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் இது நன்மை அளிக்க கூடிய விஷயமே.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








