இதுக்குதான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கோம்... ஒன்றிய அரசு செய்ய போகும் நல்ல காரியம்... என்னனு தெரியுமா?
இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய ஆட்டோமொபைல் துறை மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரியை குறைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலனை செய்யவுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்த விவாதங்களில் ஈடுபட தயாராக இருப்பதாக வருவாய் துறை செயலாளர் சமீபத்தில் கூறியுள்ளார். அத்துடன் இதன் விளைவுகள் குறித்த விவாதங்களில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த வார்த்தைகளுக்கு பிறகுதான், வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் லாரிகள் போன்ற வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனுடன் மாநில அரசுகளின் வரியும் இணையும்போது, இந்த வாகனங்களின் ஆன் ரோடு விலை மிகவும் அதிகமாக உயர்ந்து விடுகிறது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

எனவே வரிகளை குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தேவை உயரும் என்பது ஆட்டோமொபைல் துறையின் நம்பிக்கை. அதாவது வரிகள் குறைக்கப்பட்டு, ஆன் ரோடு விலை குறைந்தால் நிறைய பேர் வாகனங்களை வாங்க முன்வருவார்கள் என்பது ஆட்டோமொபைல் துறையின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த சூழலில்தான், வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் (Tarun Bajaj), இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (SIAM - Society of Indian Automobile Manufacturers) நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது வரிகளை குறைப்பது தொடர்பான விவாதங்களில் ஈடுபட அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஜிஎஸ்டி வரி விகிதங்களில் என்ன செய்ய முடியும்? என்பது தொடர்பான விவாதங்களில் உங்களுடன் ஈடுபட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்'' என்றார். உலகிலேயே மிகப்பெரிய வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் இந்தியாவை காட்டிலும் சீனா மிகவும் முன்னணியில் உள்ளது.

வாகன உற்பத்தி அல்லது விற்பனை என எதனை கருத்தில் கொண்டாலும், சீனா முன்னணியில் இருக்கிறது. எனவே சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டுமானால், அரசின் ஆதரவு நிச்சயம் தேவை. சீனா அளவிற்கு இந்தியாவில் வாகன விற்பனை இல்லாமல் இருப்பதற்கு, 'மலிவான விலை' என்ற காரணிதான் முக்கிய பங்காற்றுவதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதாவது விலை குறைவாக இருந்தால்தான் விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்து. இதற்கிடையே ஒன்றிய அரசு மாசு உமிழ்வு விதிகளை மிக கடுமையாக்கி வருகிறது. அத்துடன் வாகனங்களின் பாதுகாப்பையும் அதிகரித்து வருகிறது. புரியும்படி சொல்வதென்றால், வாகனங்களில் குறிப்பிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல், வாகனங்களை விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் அரசு வரிகளை குறைத்தால், அது வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் பலன் அளிக்கும்.

எனவே இந்த விவகாரத்தில் என்ன நடைபெற போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அரசு வரிகளை குறைக்கும்பட்சத்தில், வாகனங்களின் விலை குறையும் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாக வாகன விற்பனை பெரும் அளவில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பிறகு, மற்ற துறைகளை போலவே ஆட்டோமொபைல் துறையும் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. எனவே ஆட்டோமொபைல் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்குமா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், வாகனங்களை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அரசு வரியை குறைத்தால், வாகனங்களை வாங்க பலர் முன் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒன்றிய அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாகதான் உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் நாம் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








