பச்சை நிற நம்பர் ப்ளேட் உடன், சென்னை சாலையில் உலாவந்த சீன எலக்ட்ரிக் வேன்!! ஓஹோ... இதுதான் மேட்டரா
சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் அதன் முழு-எலக்ட்ரிக் டி3 கார்கோ வேன் ஒன்று இந்தியாவில் சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு பிஒய்டி இ6 இவி கார் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டி3 எலக்ட்ரிக் வேன் நம் நாட்டில் காட்சி தந்துள்ளது.

நமது சென்னையில் பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார்கோ வேன் முழுக்க முழுக்க இந்த சோதனைக்காக சீனாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புண்டு.

சீன ஆட்டோமொபைல் பிராண்டான பி.ஒய்.டி, உலகின் மிக பெரிய சந்தைகளுள் ஒன்றான இந்தியாவில் அதன் காலடித்தடத்தை பதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க தயாராகிய பிஒய்டி நிறுவனத்திற்கு, இந்தியாவில் சமீபத்தில் இருந்த சீன தயாரிப்புகளுக்கு எதிரான நிலைப்பாடு பல யோசனைகளை கிளப்பியுள்ளது என்று தான் தோன்றுகிறது.

ஏனெனில் இதனால் தான் எலக்ட்ரிக் கார்கோ வேனின் பக்கம் இந்த சீன நிறுவனம் சென்றுள்ளது. தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை எலக்ட்ரிக் வேனில் இரண்டாவது வரிசை இருக்கைகள் மற்றும் மூன்றாவது வரிசை ஜன்னல் கண்ணாடிகள் இல்லாததை பார்க்க முடிகிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, டி3 முழு-எலக்ட்ரிக் வேனின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 300கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். மேலும், இதன் பேட்டரியை டிசி சார்ஜரின் உதவியுடன் 90 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட முடியும் எனவும் பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் விற்பனையை துவங்கினால் இந்த எலக்ட்ரிக் வேனிற்கான எலக்ட்ரிக் மோட்டார் உள்பட பெரும்பான்மையான பாகங்கள் இ6 எலக்ட்ரிக் காரில் இருந்து தான் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அப்போது தான் நிறுவனத்திற்கு தயாரிப்பு செலவு அதிகமாகாது.

டி3 கமர்ஷியல் வேன் பெட்டகம் வடிவிலானது. இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற வேன்களுடன் ஒப்பிடுகையில் அதிக வளைவுகளை கொண்டுள்ள இந்த முழு-எலக்ட்ரிக் வேன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஆண்டில் வருடத்திற்கு 2,500 சிபியூ மாடல்களாக விற்பனை செய்யப்படும்.

அதன் பிறகே பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை திறக்கலாம். இந்தியாவில் கார்கோ வேன்களின் விற்பனை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் தொடர் உயர்வால் சற்று தொய்வாகவே நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனால் இந்த பிரிவில் ஒரு எலக்ட்ரிக் வாகனம் நுழைந்தால் அது வாடிக்கையாளர்கள் பலரது தேர்வாக அமையலாம். அதுமட்டுமில்லாமல் மின்சார வாகனங்களில் பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








