எரிபொருள் நிரப்புவதைவிட வேகமாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய முடியுமா?.. ஆச்சரியப்படாதீங்க சாத்தியம் இருக்கு!
எரிபொருள் நிரப்புவதைப் போல் மின் வாகனங்களை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியுமா?, இதற்கு ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு மாற்றாக உலகம் முழுவதிலும் மின் வாகன ஊக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், இந்தியாவில் மின் வாகனங்களுக்கு மானியம் மற்றும் சிறப்பு வரி சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

ஆகையால், இந்தியாவில் மின் வாகன விற்பனை லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன், பெட்ரோல்-டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்ற காரணத்தினாலும் மக்கள் மின் வாகனங்களின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் மின் வாகன பயன்பாட்டில் சில குறைபாடுகள் இருக்கின்றன. இதில், மிக முக்கியமானது போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாதது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இருக்கின்ற அளவிற்கு அடிப்படை வசதிகள் மின் வாகனங்களுக்கு இல்லாதது ஓர் வேதனையளிக்கும் விஷயம் ஆகும். பெட்ரோல் பங்க்குகளுடன் ஒப்பிடுகையில் சார்ஜிங் நிலையங்கள் மிக மிக குறைவாக உள்ளன. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

ஆகையால், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக கணிசமாக உயர தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், ஒரு சிலர் மின் வாகனத்தை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவை பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல் விரைவில் தேவையான அளவு சார்ஜினை ஏற்ற முடியாது என்பது மட்டுமே காரணம் ஆகும். எரிபொருளால் இயங்கும் வாகனங்களில் ஒரு சில நிமிடங்களிலேயே தேவையான அளவு எரிபொருளை நிரப்பிவிட முடியும்.

ஆனால், மின்சார வாகனங்கள் இதுபோன்று இல்லை என்பதே வருத்தமளிக்கும் தகவல். எனவே பலர் இந்த விஷயத்தை மாற்ற முடியுமா என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கின்றனர். அதாவது, பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல் சில நிமிடங்களில் மின் வாகனத்தில் தேவையான அளவு சார்ஜை ஏற்றிவிட முடியுமா என எதிர்பார்க்கின்றனர். இதற்கு சாத்தியம் இருக்கின்றது என்பதை விளக்கவே இப்பதிவை நாங்கள் வழங்கியிருக்கின்றோம்.

வாகனத்தை சில நிமிடங்களில் சார்ஜ் செய்வது சாத்தியமே
மின் வாகன உற்பத்தியாளர்கள் தற்போது இரு விதமான சார்ஜிங் வசதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றனர். வழக்கமான சார்ஜ் திறன் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் என இரு விதமான திறன்களுடன் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்குகின்றனர்.

இதில், வழக்கமான சார்ஜிங் வசதி மூலம் சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை முழுமையாக சார்ஜாக அந்த வாகனம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவே, ஃபாஸ்ட் சார்ஜிங் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 2 மணி நேரத்திலேயே அது முழுமையான சார்ஜை ஏற்றிக் கொள்ளும்.

இதற்கு, 30.2 kWh பேட்டரி வசதியுடன் நாட்டின் மலிவு விலை மின்சார காராக விற்பனைக்குக் கிடைக்கும் டாடா நெக்ஸான் ஓர் மிக சிறந்த உதாரணம் ஆகும். மேலே கூறப்பட்டு சார்ஜ் திறன் பற்றிய தகவலும் இந்த காருடையதே ஆகும். இதுமாதிரியான சிக்கல்களிலேயே தற்போதைய மின் வாகன பயன்பாட்டாளர்கள் சிக்கியிருக்கின்றனர்.

இதில் இருந்து விடிவு காலம் பிறக்குமா என்பதே தற்போதைய மற்றும் எதிர்கால மின் வாகன பயன்பாட்டாளர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதற்கான எங்களுடைய பதில் ரொம்ப நாள் இந்த இன்னல்கள் நீடிக்கது என்பதே ஆகும்.

உலகளவில் மக்கள் பலர் மிக அதிக நேரம் சார்ஜேற்ற தேவைப்படுவதால் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனையறிந்த மின் வாகன உற்பத்தியாளர் கடும் ஆராய்ச்சியில் களமிறங்கியிருக்கின்றனர்.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மின்சார வாகனங்களை மிக விரைவில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றனர். இது பெட்ரோல்-டீசல் வாகனங்களில் மிகக் குறைவான நேரத்தில் எரிபொருளைப் நிரப்புவதுபோல் மிகக் குறைவான நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜேற்ற உதவும்.

மிக சமீபத்தில் இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான ஸ்டோர் டாட், சீனாவின் ஈவ் எனர்ஜியுடன் இணைந்து ஓர் புதிய தலைமுற லித்தியன் அயன் பேட்டரியை அண்மையில் உருவாக்கியிருந்தது. பரிசோதனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி வெறும் ஐந்தே நிமிடத்தில் முழுமையாக சார்ஜாகும் திறன் கொண்டதாகும். இது எரிபொருள் நிரப்புவதைப் போல மிக குறுகிய நேரம் ஆகும்.

இதேபோன்று அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஃபோர்டு மோட்டார் நிறுவனம், 2027ம் ஆண்டிற்குள் மிக வேகமாக சார்ஜாகும் திட நில பேட்டரிகளை உற்பத்தி செய்ய இருப்பதகா நம்பிக்கையுடன் கூறியுள்ளது. தொடர்ந்து. ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் அமெரிக்காவைச் சேர்ந்த குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்துடன் இணைந்து அடர்த்தியான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் லித்தியம் உலோகத்தால் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜாக கூடிய பேட்டரியை உருவாக்கும் பணயில் களமிறங்கியிருக்கின்றது.

ஆகையால் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்டு வரும் அதி-வேக சார்ஜிங் திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக விரைவில் உலக சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே கிடைத்து வரும் வரவேற்பை வைத்து பார்க்கையில் மிக விரைவில் உலக வாகன சந்தையை எலெக்ட்ரிக் வாகனங்களே ஆள இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பேட்டரி திறனை மேம்படுத்தும் முயற்சி வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








