கேரளாவில் கார்களை அலங்கரிக்க தடை! காரணம் தெரிஞ்சா ரொம்ப ஆசைப்பட்டு வாங்கியதா இருந்தாலும் தூக்கி போட்ருவீங்க!!
கேரளாவில் கார் கேபினை அலங்கரிக்கும் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிர்ச்சியளிக்கும் காரணத்தை இப்பதிவில் காணலாம்.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களை மாடிஃபை செய்வது குற்றவாகும். வாகனங்களின் உண்மைத் தோற்றத்தை மாற்றும் வகையில் மாடிஃபிகேஷன்கள் அமைவதால், இதற்கு இந்திய அரசு தடைவித்துள்ளது. உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் வன்முறை மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் அவற்றை இனம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலின் அடிப்படையிலேயே இந்த தடை மிகக் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வாகனத்தின் உட்புறத்தில் மேற்கொள்ளப்படும் அலங்காரங்களுக்கும் ஓர் மாநில அரசு திடீரென தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டுநர்களின் பார்வையை மறைக்கும் செய்யப்படக் கூடிய எந்தவொரு அலங்காரமும் இனி வாகனங்களில் செய்யப்படக் கூடாது என அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவிலேயே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகையால், ஏற்கனவே அலங்கரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களையும் உடனடியாக கார்களில் அகற்றே வேண்டும் என போலீஸார் வாகன உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். மீறுவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி மாநிலபோக்குவரத்து ஆணையருக்கு பினராய விஜயன் தலைமையிலான கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் தங்களின் படுக்கையறை முதற்கொண்டு அலுவலக கேபின் வரை சிறப்பு அலங்காரப் பொருட்கள் மூலம் அலங்காரம் செய்து கொள்கின்றனர். தனக்கு பிடித்த ஹீரோ, தொழிலதிபர், தலைவர்கள் அல்லது கடவுள் போன்றோரின் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்கின்றனர்.

சிலர், பூங்கொத்து அல்லது பிற பொம்மைகளைக் கொண்டு அலங்காரம் செய்கின்றனர். அந்தவகையில், மிகுந்த ஆசையுடன் வாங்கப்படும் கார்களையும் விட்டு வைக்காமல் அதன் கேபினையும் ஸ்மைலி பொம்மை, தெய்வங்களின் உருவம் அல்லது அசைந்தாடும் பொம்மைகளைக் கொண்டு அலங்கரிக்கின்றனர். இதுதவிர பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடி போன்றவற்றில் சங்கிலி, மணி போன்றவற்றைக் கட்டித் தொங்கவிடுகின்றனர்.

இவையே ஓட்டுநர்களின் பார்வையை மறைத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி உடனடியாக அகற்ற வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டிருக்கின்றது. இந்த அதிரடி உத்தரவை அடுத்து முன்னதாக வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்த கேரள மோட்டார் வாகனத்துறை தற்போது வாகன அலங்கார செயலுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகின்றது.

அலங்காரப் பொருட்கள் மட்டுமின்றி முன்பக்க விண்ட்-ஷீல்ட் பகுதியில் எந்தவொரு பொருட்களையும் வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள், ஏன், சிறிய பேப்பரைக் கூட முன்பக்கத்தில் பார்வையை மறைக்கும் வகையில் வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதனால், ஆசை ஆசை வாங்கிய பொருட்களை அகற்றும் பணியில் வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் கேரள அரசுக் கொண்டு வந்திருக்கும் இந்த புதிய வாகன ஆர்வலர்கள் வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, இதுமாதிரியான பாதுகாப்பு விதிகளை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications