கார் விலை உயர்கிறது... புது கார் புக்கிங் செய்வதற்கு முன் இதை கவனத்தில் வசு்சுக்கோங்க!
வரும் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆண்டு இறுதியில் கார் புக்கிங் செய்ய இருப்பவர்களுக்கு இந்த செய்தியை படித்துவிட்டு கார் புக்கிங் செய்வது சிறந்ததாக இருக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் ஆண்டு இறுதியில் இருந்து கார்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றன. பொருளாதார இழப்புகளிலிருந்து மீளும் விதமாக, இந்த ஆண்டும் பல தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது விலை உயர்வு நடவடிக்கையை எடுத்து வர்த்தகத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கின.

இந்த நிலையில், புத்தாண்டில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஒரு ஏமாற்றத்தை தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. நாட்டின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி சுஸுகி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனங்கள் விலை உயர்வு முடிவை அறிவித்துவிட்டன.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துவிட்டது. ஆடி கார் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துவிட்டது. வரும் ஜனவரி 1 முதல் கார்களின் விலை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதால் வர்த்தகத்தை கட்டுக்குள் வைக்கும் விதமாக இந்த விலை உயர்வு நடவடிக்கையை கார் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை ஜனவரி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது. டாடா பன்ச், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட கார்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோண்டா கார் நிறுவனமும் விலை உயர்வை பரிசீலித்து வருகிறது. எனவே, புத்தாண்டு முதல் ஹோண்டா கார்களின் விலை கணிசமாக உயரும் வாய்ப்பும் இருக்கிறது. உற்பத்தி செலவீனத்தை சமன் செய்வதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலித்து வருவதாக ஹோண்டா இந்தியா கார் நிறவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிட்டி, அமேஸ் கார்களின் விலை உயர்த்தப்பட்டது.

னோ கார் நிறுவனமும் கார் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் கார் விலையை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ரெனோ க்விட், ட்ரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்களின் விலை உயத்தப்படும்.

கார் உற்பத்திக்கான ஸ்டீல், அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல மூலப்பொருட்களின் விலை கடந்த ஓர் ஆண்டில் கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால், கார் நிறுவனங்கள் அந்த விலை உயர்வை சமாளிக்கும் விதத்தில் அவ்வப்போது கார் விலை உயர்வு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இந்த சூழலில், புத்தாண்டில் புதிய கார் வாங்க புக்கிங் செய்பவர்கள் டீலரில் விலை உயர்வு பொருந்துமா அல்லது இப்போது புக்கிங் செய்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பதை தெரிந்து கொண்டு புக்கிங் செய்வது அவசியம். இல்லையெனில், புதிய கார் வாங்கும்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே, டீலரில் உள்ள விற்பனை பிரதிநிதியிடம் உறுதியாக தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வது உசிதம்.


Click it and Unblock the Notifications








