அனைத்து மாநில அதிகாரிகள் மீட்டிங்கில் தமிழகத்தை பாராட்டிய மத்திய சுகாராத்துறை... தொடர் புகழ்ச்சியில் தமிழகம்!
சென்னையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கால் டாக்சி சேவையை மத்திய சுகாதாரத்துறை பாராட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் பற்றக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. இது குறிப்பிட்டதுறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசுகளுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி வருகின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையும் வகையில் சென்னையில் கால் டாக்சி வாகனங்கள் தற்காலிகமாக ஆம்புலன்ஸ்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் 250 கால் டாக்சி வாகனங்கள் ஆக்சிஜன் வசதிக் கொண்ட ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அதன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அண்மையில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெரிவித்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. முழு ஊரடங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் வைரஸ் தொற்றின் பரவல் வேகம் கணிசமாக குறைந்திருக்கின்றது.

இருப்பினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதில், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை பெரும் தலைவலியை அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையைச் சமாளிக்கும் விதமாக குறிப்பிட்ட சில மாநில அரசுகள் பேருந்துகளை தற்காலிக ஆக்சிஜன் வாகனங்களாக மாற்றின. அதேசமயம், சில தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களும் அரசுகளுக்கு உதவி கரம் நீட்டும் விதமாக தங்களின் வாகனங்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றி வழங்கின.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஆம்புலன்ஸ்களின் அதிகப்படியான தேவையை உணர்ந்து உடனடியாக கால் டாக்சி வாகனங்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. தமிழக அரசின் இந்த அதிரடி முயற்சிக்குதான் தற்போது மத்திய சுகாதாரத்துறை அதன் பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றது.

மேலும், இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசுகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அது கூறியிருக்கின்றது. இதேபோன்று மிக சமீபத்தில், "சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழ்நாடுதான் பெஸ்ட், இதில் இந்தியாவே தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும்" என அண்மையில் போக்குவரத்து - தெற்காசியா, உலக வங்கியின் பயிற்சி மேலாளர் ஷோமிக் ராஜ் மெஹந்திராட்டா கூறியிருந்தார்.

இவ்வாறு பல்வேறு விஷயங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலைப்பாட்டையே தற்போதைய கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழகம் கடைபிடித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications