மறுபடியும் முதல்ல இருந்தா?.. மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் முயற்சியில் பிரபல சீன நிறுவனம்...
பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த முறை வேற லெவல் திட்டத்தில் நிறுவனம் களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்திய வாகன சந்தையில் அடியெடுத்து வைப்பதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம். சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் இந்நிறுவனம் புகழ்வாய்ந்த (கொடி கட்டி பறந்து) நிறுவனமாக இருக்கின்றது.

இந்நிறுவனமே இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்தது. ஆனால், சீனா-இந்தியா இடையே ஏற்பட்ட திடீர் மோதல் நிறுவனத்தின் அரங்கேற்றத்திற்கு முற்று புள்ளி வைத்துவிட்டது. கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே இக்கார் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி பணிகளை தொடங்க இருந்தது.

ஆனால், கோவிட்-19 வைரஸ் பரவல் இந்நிறுவனத்தின் முதலீடு ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இரு நாட்டுக்கும் இடையே கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. இது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருகைக்கு மிகப்பெரிய முற்று புள்ளியை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலேயே, தற்போது மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான முயற்சியில் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் களமிறங்கியிருப்பதாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. முன்பு, இந்தியாவை புதுமுக எஸ்யூவிக்களின் அறிமுகத்தைக் கொண்டு அலங்கரிக்க இருந்தது கிரேட் வால் மோட்டார்ஸ். இத்துடன், சில மின்சார கார்களையும் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், இவற்றில் எதையும் செய்ய முடியாமல் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்திய நுழைவு கனவை கலைத்துக் கொண்டது. தற்போது, மீண்டும் இந்தியா வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், தனது புகழ்பெற்ற இம்முறை டி பிரிவு எஸ்யூவி மற்றும் பி பிரிவு ஹேட்ச்பேக் மின்சார கார்களையே நாட்டில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது கிரேட் வால் மோட்டார்ஸ்.

இக்கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட அலகுகளாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், முன்னதாக நேரடி முதலீட்டைச் செய்யவே நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது இந்தியா கடுமையான கெடுபிடிகளைக் காட்டி வருவதால் தனது மூலதன செலவீணத்தை குறைக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இதன் விளைவே நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளையும் சிபியு (completely built units) மற்றும் ஐகேடிகே வாயிலாக (importing knocked-down kits) களமிறக்கும் யுக்திக்கு மாற காரணமாக அமைந்துள்ளது. இவற்றின் வாயிலாகவே மின்சாரம், ஹைபிரிட் மற்றும் ப்யூவல் செல் கார்களைக் களமிறக்க நிறுவனம் வழி வகுத்து வருகின்றது.

வரும் 2022 நிதியாண்டு நிச்சயம் தங்களின் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என கிரேட் வால்ஸ் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இதன் விளைவாகவே நாட்டில் களமிறங்கும் பணியை மீண்டும் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் முக்கிய அதிகாரிகளை நியமித்தல் என பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது கிரேட் வால் மோட்டார்ஸ்.

இந்தியாவில் அமைய இருந்த மாபெரும் கார் உற்பத்தி ஆலை திட்டம் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்த முக்கியமான உற்பத்தி ஆலையை தாய்லாந்து அல்லது ரஷ்யாவில் அமைக்கும் திட்டத்தில் கிரேட் வால் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








