இந்தியாவிற்கான முதல் சிட்ரோன் கார் அறிமுகம் எப்போது?.. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய தகவல்!!
சிட்ரோன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் கார் எப்போது அறிமுகம் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன், விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு இந்தியாவிற்கான முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரக காரை களமிறக்க இருக்கின்றது நிறுவனம். இந்த காரின் அறிமுக தேதி பற்றிய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்கார் வரும் ஏப்ரல் 7ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் காருக்கான புக்கிங்கை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 6ம் தேதிக்கு முன்னர் வரை காரை புக் செய்வோர்க்கு சிறப்பு சலுகையாக 5 வருடங்கள்/50,000 கிமீ பராமரிப்பு பேக்கேஜை வழங்க சிட்ரோன் திட்டமிட்டிருக்கின்றது. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் இந்தியாவில் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஃபீல் (Feel) மற்றும் ஷைன் (Shine) இவையே சி5 ஏர்க்ராஸ் காரின் இரு விதமான வேரியண்டுகள் ஆகும். இக்காரில் வழக்கமான அம்சங்களாக 12.3 இன்சிலான டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 8.0 இன்சிலான தொடுதிரை, ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங், பவர் டிரைவர் இருக்கை, பேட்டில் விளக்குகள், பெரிய டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றன.

இத்துடன் வேரியண்ட் வாரியாக சில தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்களும் அந்தந்த வேரியண்டுகளில் இடம்பெற இருக்கின்றன. குறிப்பாக, ஷைன் வேரியண்டில் சில தனித்துவமான வசதிகள் இடம்பெற இருக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை இந்த வேரியண்டில் கூடுதலாக இடம் பெற இருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களாக இக்காரில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றன.

இத்துடன் மிக தனித்துவமான வசதியாக, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரில் இருக்கும் பின்புறத்தில் இருக்கும் மூன்று இருக்கைகளையுமே மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை மடித்து வைத்துக் கொள்வதன் மூலம் அதிக பூட் ஸ்பேஸை பெற முடியும். ஆகையால், இதில் கூடுதல் சரக்கு அல்லது பொதிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

எஞ்ஜின்
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது அதிகபட்சமாக 177பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு தானியங்கி கட்டுப்பாட்டு கருவியுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

விலை:
சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை சிட்ரோன் நிறுவனம் ரூ. 30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார்களை விற்பனைச் செய்வதற்காக நாட்டின் 10 முக்கிய நகரங்களில் லா மெய்சன் எனும் ஷோரூம்களை நிறுவனம் திறந்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் இத்தகைய உச்சபட்ச விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








