இந்தியாவிலேயே பெரிய பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்... எந்த ஊருக்கு இந்த அதிர்ஷ்டம் தெரியுமா?
இந்தியாவிலேயே பெரிய பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் நவி மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷனை மெஜண்டா நிறுவனம் தற்போது அமைத்துள்ளது. இந்த பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன், மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் 24 மணி நேரமும் செயல்படும்.

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காக 21 ஏசி/டிசி சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சார்ஜர் மற்றும் வாகனங்களை பொறுத்து சார்ஜ் செய்வதற்கு சுமாராக 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் சார்ஜர் மற்றும் வாகனங்களை பொறுத்து, சார்ஜ் செய்வதற்கான நேரம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசி ஸ்லோ சார்ஜர் தேவைப்படும் வாகனங்களுக்காக பார்க்கிங் பகுதியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் வாகனத்தை நிறுத்தியும் சார்ஜ் செய்யலாம். இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷனில் 40 KW சூரிய சக்தி ஆற்றல் வசதியும் இடம்பெற்றுள்ளது. மெஜண்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய 2 பிரச்னைகளையும் குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன. இதன் காரணமாகதான் அரசின் முயற்சிகளுக்கு மெஜண்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆதரவாக அமையும் என கூறுகிறோம். மெஜண்டா தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன.

இதில், டாடா பவர் முக்கியமானது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தற்போது டாடா பவர் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி தோராயமாக 16,200 எலெக்ட்ரிக் கார்களுக்கு 1,800 சார்ஜிங் ஸ்டேஷன்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகன புரட்சி ஏற்பட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையுடன், அவற்றுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளும் பெருகும். ஒன்றிய அரசை பொறுத்தவரை, எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, எத்தனால் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








