தொழிலாளர் போராட்டம் எதிரொலி... சென்னை கார் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி வைப்பு!
கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களின் கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், பல மாநிலங்களில் லாக் டவுன் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததால், முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய வியாபார நிறுவனங்களை தவிர்த்து, பிற அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சில விலக்குகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல வாகன ஆலைகளில் தொடர்ந்து உற்பத்திப் பணிகள் நடந்து வந்தன. பல ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் இந்த ஆலைகளில் தொடர்ந்து உற்பத்திப் பணிகள் நடந்து வருவதால், கொரோனா எளிதாக பரவும் அபாயம் இருப்பதாக தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்த நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்தையடுத்து, கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்திப் பணிகளை சில நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. அதன்படி, ஹூண்டாய் நிறுவனம் நேற்றுமுதல் வரும் 30ந் தேதி வரை உற்பத்திப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது சென்னை அருகே ஒரகடத்தில் இயங்கி வரும் ரெனோ - நிஸான் கார் ஆலையிலும் உற்பத்திப் பணிகள் இன்று முதல் வரும் 30ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெனோ - நிஸான் நிறுவனத்தின் சிஇஓ பிஜு பாலேந்திரன் கூறுகையில்,"சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனினும், எங்களது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதனால், மே 26 முதல் 30 வரை சென்னை ஆலையில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இது எல்லோருக்கும் மிகவும் சவாலான தருணம், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவை வழங்கப்படும் என்று நிறுவனத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ரெனோ - நிஸான் ஆலை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஒரகடம் ரெனோ - நிஸான் கார் ஆலையில் 5,000 தொழிலாளர்கள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆலையில் தொடர்ந்து உற்பத்திப் பணிகள் நடந்து வந்ததால், கொரோனா பரவும் அபாயம் இருப்பதை கருத்தில்கொண்டே உற்பத்தியை நிறுத்த வலியுறுத்தியதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








