இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!! 2021 மார்ச் மாத விற்பனை நிலவரம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 52,600 கார்களை விற்பனை செய்துள்ளது.

அதுவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 26,300 கார்களையே இந்த தென் கொரிய நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் சுமார் 100 சதவீத வளர்ச்சியை விற்பனையில் ஹூண்டாய் கண்டுள்ளது.

வருடம்- வருடம் ஒப்பிடுகையில் மட்டுமில்லாமல் கடந்த 2021 பிப்ரவரி மாதத்துடனான ஒப்பிடுகையிலும் ஹூண்டாயின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 1.94 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் சற்று குறைவாக 51,600 யூனிட் ஹூண்டாய் கார்களே விற்கப்பட்டு இருந்தன.

இருப்பினும் கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்கப்பட்ட ஒட்டு மொத்த கார்கள் எண்ணிக்கையில் ஹூண்டாயின் பங்கு 16.4 சதவீதமாக குறைந்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் 18.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் பிராண்டில் இருந்து தற்சமயம் சாண்ட்ரோ, க்ராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா, ஐ20, வென்யூ, வெர்னா, எலண்ட்ரா, க்ரெட்டா, டக்ஸன் மற்றும் கோனா இவி என்ற 10 கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

எக்ஸ்செண்ட் ப்ரைம் என்ற காரும் உள்ளது. ஆனால் இது கமர்ஷியல் வாகனமாக டாக்ஸி உள்ளிட்ட பயன்பாட்டிற்கு தான் விற்கப்படுகிறது. இவற்றில் க்ரெட்டா எஸ்யூவி மாடலே தற்போதைக்கு ஹூண்டாயின் மிக பெரிய நம்பிக்கை தூணாக உள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி காராக உள்ள க்ரெட்டாவின் புதிய தலைமுறை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேநேரம் வென்யூ மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கு இவற்றின் மலிவான விலை மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்நுட்ப வசதிகளை காரணங்களாக சொல்லலாம். புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்ததற்கு பிறகு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே டீசல் கார்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

இதில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்றாகும். இதுவே இந்த நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து வலிமையானதாக இருக்க காரணமாகும். இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி கூட பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் அடுத்ததாக இந்தியாவில் அல்கஸார் என்ற பெயரில், விறுவிறுப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் க்ரெட்டாவின் மூன்று-இருக்கை வரிசை வெர்சனை வருகிற 6ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில், இந்த காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








