நல்ல வேல கேமிரா இருந்ததால தப்பிச்சாரு... இல்லனா ஐயாயிரத்த தண்டமா மொய் வச்சிருப்பாரு... ஜஸ்ட் மிஸ்!
டேஷ்கேமிராவால் போலீஸாரின் நடவடிக்கை மற்றும் ஐயாயிரம் ரூபா அபராதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பியிருக்கின்றார். இதுகுறித்தக் கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் கார்களில் டேஷ்போர்டு கேமிரா பொருத்துவது கட்டாயமாகியுள்ளது. இதனை உணர்த்தும் வகையிலான ஓர் சம்பவமே தலைநகர் டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமிரா, அக்காரின் உரிமையாளரை ரூ. 5,000 அபராதம் மற்றும் போலீஸாரின் நடவடிக்கையில் காப்பாற்றியிருக்கின்றது. என்ன நடந்தது?, எப்படி அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார்?, என்பதைப் பார்க்கலாம் வாங்க.

பெயரிடப்படாத அந்நபர் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. இவர், மேஜர் ஆர்டீரியல் சாலையில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர், நீண்ட நேரமாக சிக்னலில் காத்திருந்தநிலையில், பச்சை சமிக்ஞை கிடைத்த உடன் அவர் முன்னேறியிருக்கின்றார்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!

அப்போது, வலது பக்கமாக திரும்புவதற்காக இடது புறத்திலிருந்து ஓர் இன்னோவா கார் க்ராஸ் செய்தது. ஏற்கனவே தனக்கு முன்னதாக ஓர் கார் சென்றுக் கொண்டிருந்ததாலும், இடதிலிருந்து இன்டிகேட்டரைப் போட்டவாறு இன்னோவா கார் ஏறி வந்ததாலும், அந்த இளைஞர் தனது காரை பொறுமையாக இயக்கினார். அவ்வாறு, அவர் ஸ்டாப் லைனை (நிறுத்தும் கோடு) தாண்டும் வரை பச்சை சமிக்ஞை விளக்கு எரிந்தவாறே இருந்தது.

ஆனால், இன்னோவா கார் கடப்பதற்குள் இளைஞருக்கு பச்சை சிக்னல் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து, எதிர்புறத்தில் வாகனங்களும் செல்ல தொடங்கிவிட்டன. இதனால், இளைஞர் நடு ரோட்டில் நிற்கும் நிலை உருவாகியது. நடு ரோட்டில் நின்றால் பிற வாகனங்களுக்கு இடையூறாக அமையும் என்பதை உணர்ந்த அவர், பின்னே நகர்ந்து ஜீப்ரா க்ராஸிங் கடந்துச் சென்று நின்றார்.

இதனைக் கண்ட போக்குவரத்து காவலர்கள் இளைஞர் விதிமீறியதாகக் கருதிக் கொண்டு, அவருக்கு அபராதத்தை வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டனர். ஆனால், தன்மீது தவறு இல்லை என்பதை வாய்மொழியாக போலீஸாரிடத்தில் இளைஞர் கூறினார். இருப்பினும், காவலர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, டேஷ்கேமிராவில் இடம் பெற்றிருந்த காட்சிகளைப் போலீஸாரிடத்தில் காண்பித்தார், அவர்.

இதன் பின்னரே அபராதம் வழங்கும் முயற்சியை போலீஸார் கைவிட்டனர். தொடர்ந்து, அவரை முன்னேறி செல்லவும் அனுமதித்தனர். இதுகுறித்த சம்பவத்தை அந்த இளைஞர் ஸ்மார்ட்போனிலும் காட்சியாகப் படம் பிடித்துக் கொண்டார். இந்த முழு சம்பவம் பற்றிய வீடியோவையும் ரிடிகுளஸ்லி அமேசிங் எனும் யுட்யூப் சேனல் வாயிலாக அவர் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முக்கியமாக, டேஷ்கேமிராவின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கிலேயே இவ்வீடியோவை அவர் வெளியிட்டிருக்கின்றார். தலைநகர் டெல்லியில் சிக்னலை மீறும் விதிமீறலுக்கு ரூ. 5 ஆயிரம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய மாபெரும் நடவடிக்கையில் இருந்து இளைஞரை டேஷ்கேமிரா காப்பாற்றியிருக்கின்றது. போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து மட்டுமின்றி விபத்து மற்றும் கார் திருட்டு போன்றவற்றில் இருந்தும் உடனடி பதிலைப் பெற டேஷ்கேமிராக்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications