பாத்த உடனே கண்டுபுடுச்சர்லாம்... வாகனங்களில் இனி இந்த ஸ்டிக்கர் கண்டிப்பா இருக்கணும்... என்னனு தெரியுமா?
வாகனங்களில் இனி இந்த ஸ்டிக்கர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு கலர் கோடு எரிபொருள் ஸ்டிக்கர்களை பெற வேண்டும் என டெல்லி அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை இந்த அறிவுறுத்தலை வாகன உரிமையாளர்களுக்கு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின்படி டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் க்ரோமியம் சார்ந்த ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் கட்டாயம்.

இதனை வாகனங்களில் ஒட்டியிருக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை இது தொடர்பான அறிவுறுத்தலை நேற்று (நவம்பர் 19) வெளியிட்டது. போக்குவரத்து துறையின் அறிக்கையில், ''க்ரோமியம் சார்ந்த ஹாலோகிராம் ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட டீலர்களை அணுக வேண்டும்.

அவர்களின் வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். எரிபொருள் வகைக்கு ஏற்ற நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்'' என கூறப்பட்டுள்ளது. கலர் கோடு ஸ்டிக்கர்களை ஒட்டுவதன் மூலம், அதிகாரிகள் சாலையில் சோதனை செய்யும்போது, வாகனத்தின் எரிபொருள் வகையை எளிதாக கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் இருக்காது. அவர்கள் தங்கள் வாகனங்களில் உடனடியாக ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்ள வேண்டும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு நீல நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அதே நேரத்தில் டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

வாகனங்களில் கலர் கோடு ஸ்டிக்கர் ஒட்டாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் தற்போதைக்கு அபராதம் விதிக்கும் எண்ணம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த ஸ்டிக்கர்கள் குறித்த விழிப்புணர்வை தற்போது நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.

வாகன உரிமையாளர்கள் மீது தற்போதைக்கு நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை'' என்றனர். இந்த ஸ்டிக்கர்கள் வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸிஸ் நம்பர்கள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையால் தற்போது நிலைமை கையை மீறி சென்று கொண்டுள்ளது.

எனவே அங்கு உடனடியாக காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாகதான் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி தவிர மற்ற மாநில அரசுகளும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெல்லியை போல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதுதான் இதற்கு காரணம். காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என வழக்கமான எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணம் என்பதால்தான், அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலமாக இருக்கும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








