சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...
டெல்லி அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது வரை எவ்வளவு கோடி ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது? என்ற தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்பட்டது முதல் தலைநகர் டெல்லியில், கிட்டத்தட்ட 7 ஆயிரம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தற்போது கூறியுள்ளது. டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியவர்களுக்கு தற்போது வரை ஒட்டுமொத்தமாக 13.50 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட 21 மாடல்களுக்கு இந்த மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அம்மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை டெல்லி மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி கொண்டுள்ளது.

ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி வைத்தார். இது 8 வாரங்களுக்கு நடைபெறக்கூடிய விழிப்புணர்வு திட்டமாகும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து டெல்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? என்பது போன்ற விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து, உமிழ்வு இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்களை மாற வைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவேன் மற்றும் வீட்டின் வளாகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பேன் என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும் என டெல்லி மக்களிடம் கேட்டு கொள்கிறேன். நான் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளேன். அனைவரும் எடுப்பார்கள் எனவும் நம்புகிறேன்'' என்றார்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறையும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் தற்போது கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளும் காணப்படுகின்றன. ஆனால் வரும் காலங்களில் இந்த பிரச்னை வேகமாக தீர்க்கப்படும் என நம்பலாம். ஏனெனில் டெல்லி போன்ற மாநில அரசுகள் மட்டுமல்லாது, மத்திய அரசும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








