அடுத்த அதிரடி... முதல்வர் கெஜ்ரிவால் பட்டைய கௌப்புறாரு... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் டெல்லி...
டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அடுத்ததாக ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தலைநகர் டெல்லி, காற்று மாசுபாடு பிரச்னையால் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது? என்பது நம் அனைவருக்குமே தெரியும். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் இந்த பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு டெல்லி அரசு முயற்சி செய்து வருகிறது.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக டெல்லி திகழ்ந்து வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இதன்படி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 'ஸ்விட்ச் டெல்லி' என்ற திட்டத்தையும் டெல்லி அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலப்படுத்தப்படவுள்ளன. இதுதவிர டெல்லியில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர்களுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இந்த வரிசையில் டெல்லி அரசின் மின்சார துறையும் தன் பங்கிற்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி டெல்லி அரசின் மின்சார துறை சார்பில், ஒரு ஆண்டு காலத்திற்குள், 500 சார்ஜிங் பாயிண்ட்கள் உடன் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்து டெல்லி அரசின் மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ''500 சார்ஜிங் பாயிண்ட்கள் உடன் 100 சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்குள் அவை தயாராகி விடும்.

இதில் பெரும்பாலான சார்ஜிங் ஸ்டேஷன்கள், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், டெல்லி போக்குவரத்து கழகத்தின் பஸ் டெப்போக்களிலும் அமைக்கப்படும்'' என்றார். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் ஏற்று கொள்ள தயங்குவதற்கு அவற்றின் அதிகப்படியான விலையும், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையும்தான் 2 முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே மானியங்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதோடு, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையையும் டெல்லி அரசு அதிகரித்து வருகிறது.

வரும் 2024ம் ஆண்டுக்குள் டெல்லியில் குறைந்தபட்சம் 25 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். எனவே இந்த இலக்கை அடைவதற்காக பல்வேறு அட்டகாசமான திட்டங்களை டெல்லி மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








