அவ்ளோதான்... எலெக்ட்ரிக் கார் வாங்கறவங்களுக்கு இனி இந்த சலுகை கிடையாது! அமைச்சர் சொல்றதுலயும் நியாயம் இருக்கு!
எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிக முக்கியமான சலுகை ஒன்று அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் மிகவும் முக்கியமானது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குவதை டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியாக நிறுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ், டெல்லியில் வாங்கப்படும் முதல் ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு, ஒவ்வொரு kWh பேட்டரி திறனுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.

இதன்படி எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள் அதிகபட்சமாக 1.50 லட்ச ரூபாயை மானியம் பெற்று வந்தனர். இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்தும் விலக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு kWh பேட்டரி திறனுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்கப்பட்டது.

இதன்படி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்கள் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாயை மானியமாக பெற்று வந்தனர். இதுகுறித்து டெல்லி மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''டெல்லியில் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட் தேவையான அளவிற்கு ஆதரவை பெற்று விட்டது.

எங்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் இரு சக்கர, சரக்கு மற்றும் பொது போக்குவரத்து செக்மெண்ட்டின் மீது உள்ளது. ஏனெனில் டெல்லியின் 10 மில்லியனுக்கும் (1 கோடி) மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்களில், அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தனியார் கார்களை காட்டிலும் இந்த வாகனங்கள்தான் சாலையில் அதிகளவில் இயங்குகின்றன.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபடுகிறது'' என்றார். நடப்பாண்டு ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் டெல்லியில் ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 7,869 ஆகும். அதாவது பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு சுமார் 7 சதவீதம்.

அதே நேரத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் டெல்லியில் 22,805 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது டெல்லியில் கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 31 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதை இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெல்லி மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மேலும் கூறுகையில், ''உண்மையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் தேவையில்லை. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சுமார் 15 லட்ச ரூபாயை செலவு செய்ய கூடியவர்களுக்கு, மானியம் இல்லாத காரணத்தால் 1-2 லட்ச ரூபாய் விலை அதிகம் என்பது பெரிய கவலையாக இருக்காது.

யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு மானியத்தை வழங்குவதுதான் எங்கள் நோக்கம். இதில், ஆட்டோ டிரைவர்கள், இரு சக்கர வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு நல்ல ரிசல்ட் கிடைத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது நிறைய பேர் வேகமாக மாறி கொண்டுள்ளனர்.

முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொலை நோக்கு பார்வையின்படி, டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன தலைநகரமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்'' என்றார். மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








