முதல்முறையாக டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது... விலைவாசியை நினைத்து கவலையில் ஆழ்ந்த பொதுமக்கள்!
பெட்ரோல் விலையை தொடர்ந்து முதல்முறையாக டீசல் விலையும் லிட்டர் 100 ரூபாயை தாண்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த விலை உயர்வால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு மக்களை வாட்டத் துவங்கி இருக்கிறது. கடந்த வாரம் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில், அடுத்து டீசல் விலையும் இன்று லிட்டர் 100 ரூபாயை தாண்டி மக்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது.

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் 'தம்' கட்டி வந்தன. ஆனால், தேர்தல் முடிந்த சில தினங்களிலேயே மீண்டும் வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கின.

கடந்த மாதம் முதல் இன்று வரை 40 நாட்களில் 23 முறை எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, தற்போது டீசல் விலையும் முதல்முறையாக லிட்டர் 100 ரூபாயை தாண்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கங்காநகரில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 5 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதே கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இன்று கங்காநகரில் பிரிமீயம் பெட்ரோல் லிட்டர் 110 ரூபாய் 22 காசுகள் என்ற விலையிலும், பிரிமீயம் ரக டீசல் லிட்டர் 103 ரூபாய் 47 காசுகள் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வாட் வரியில் உள்ள வேறுபாடுகள் மற்றும் போக்குவரத்து செலவு காரணமாக, மாநிலங்களுக்கு இடையில் பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடுகள் உள்ளன.

பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக, விலைவாசியும் கணிசமாக உயரும் என்பதே மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதன் எதிரொலியாக, பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட வேண்டிய சூழல் உள்ளதாக எண்ணயெ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய் 43 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 91 ரூபாய் 64 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் லிட்டர் 99 ரூபாய் 33 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 91 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பிரச்னையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விலைவாசியை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் ஊரில் பெட்ரோல் விலை குறித்த தினசரி நிலவரத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும். டீசல் விலை நிலவரத்தை தினசரி தெரிந்து கொள்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








