நீண்ட தூர பயணத்தின்போது இறுக்கமாக ஜீன்ஸ் அணிய கூடாது... ரொம்ப ஆபத்தானதாம்! எப்படி தெரியுமா?
நீண்ட தூர பயணங்களின்போது ஜீன்ஸ் அணிவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அரங்கேறிய உண்மை சம்பவம் பற்றிய தகவலை கீழே காணலாம்.

நீண்ட தூர பயணங்களின்மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம். ஆம், நீண்ட தூர பயணங்களுக்கு எவ்வாறு தயாராவது என்பதைகூட அறியாதவர்களாகவே நம்மில் பலர் இருக்கின்றனர்.

குறிப்பாக, என்ன மாதிரியான ஆடை அணிவது என்பதைகூட பலர் அறியாமல் இருப்பது வேதனை அளிக்கும் விஷயம் என்கிறார் 30 வயதான இளம் தொழிலதிபர் சவுரப் ஷர்மா. தொடர்ந்து அவர் நீண்ட தூர பயணத்தின்போது என்ன மாதிரியான வசதியான ஆடைகளை அணிய வேண்டும் என்பது பற்றியும் கூறியிருக்கின்றார்.

குறிப்பாக, நீண்ட தூர பயணத்திற்கு கிளம்புவோர் மிக இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது என அவர் கூறியுள்ளார். இருக்கமான ஆடையினால் தான் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஜீன்ஸ் போன்ற அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதன் வாயிலாக இரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்படுகின்றது. இதுமாதிரியான ஓர் பிரச்னையிலேயே ஷர்மா சிக்கியிருக்கின்றார். அதிக இறுக்கமான ஜீன்ஸை அணிந்திருந்ததில் அவரின் காலின் நரம்புகளில் ரத்தம் உறைந்திருக்கின்றது. அண்மையில் டெல்லியில் இருந்து ரிஷிகஷுக்கு பயணம் மேற்கொண்ட போதே இந்த சிக்கலை அவர் சந்தித்திருக்கின்றார்.

மருத்துவமனை சென்று பார்த்தபோதே அவரது கால்களில் ரத்தம் உறைந்திருப்பது (deep vein thrombosis) கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது ரத்த நாளங்களில் சிறிய கிளாட்டுகள் உருவாகியிருக்கின்றன. இதுவே பயணித்து அவரது நுரையீரலுக்கு சென்று, தமனியில் திடீர் அடைப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த திடீர் அடைப்பு இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதனால், மூச்சு விட சிரமம் ஏற்பட்டு ஷர்மா மயக்கமடைந்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன் விளைவாக அவர் எந்தவித சிக்கலும் இன்றி மீண்டார். சுமார் 45 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சைக்கு பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பினார். இவையனைத்திற்குமே கால்களின் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் ஆழமாக குறைந்தது மட்டுமே காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது ஷர்மாக இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்திருந்தது மட்டுமே காரணம் என கண்டறியப்பட்டது. இதனை உறுதி செய்த மருத்துவ குழுவினர் இனி இருக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். குறிப்பாக, பயணங்களின்போது இறுக்கமான ஆடை அணிவதைத் தவிர்க்குமாறு கூறினார்.

ஷர்மா தனது பயணத்தின்போது சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தியிருக்கின்றார். அது ஓர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வாகனம் என்பதால் அவர், அவருடைய கால்களை மிகவும் குறைவாகவே பயன்படுத்தியிருக்கின்றார். ஆகையால், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருக்கின்றது. இதுவே, அவருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகையால், இனி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்வதைப் போலவே மிகவும் சௌகரியமான உடைகளை அணிந்து செல்வதும் சிறந்தது. இது தேவையற்ற அசௌகரியமான உணர்வுகளை வெளியேற்ற உதவும். மேலும், உங்களது பயணத்தை இனிமையானதாகவும் மாற்ற உதவும்.


Click it and Unblock the Notifications








