பழைய வாகனங்களை இனி சாலையில் ஓட்ட கூடாது... அழித்து விடுங்கள்... மக்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!
பழைய வாகனங்களை இனி சாலையில் இயக்க வேண்டாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை சாலையில் இயக்க வேண்டாம் என மக்களுக்கு டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை தற்போது அறிவுரை வழங்கியுள்ளது. அத்துடன் இந்த வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்களில் (Scrapping Centres) ஸ்கிராப் செய்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ்கள் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றாலும், டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்க முடியாது எனவும் போக்குவரத்து துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கு தடையில்லா சான்றிதழை மக்கள் பெற முடியும்.

எனவே 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் எந்த மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறோ? அங்கு பதிவு செய்து கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம். டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை பயன்படுத்த முடியாது. அவ்வளவுதான். எனினும் இந்த அறிவிப்பு டெல்லியில் பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களை கவலையடைய செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள், அந்த வாகனங்களை டெல்லி/தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்க வேண்டாம். அங்கீகாரம் பெற்ற ஸ்கிராப்பிங் மையங்களில் அவற்றை ஸ்கிராப் செய்து விட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் டெல்லி போக்குவரத்து துறை மேற்கோள் காட்டியுள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு தனது பழைய வாகன அழிப்பு கொள்கையின் (Vehicle Scrapping Policy) கீழ், பழைய வாகனங்கள் சாலையில் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் அதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. ஃபிட்னஸ் சோதனையில் தேறினால் மட்டுமே பழைய வாகனங்கள் சாலையில் இயங்குவதற்கு ஒன்றிய அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கை அனுமதிக்கிறது. இந்த கொள்கையின் கீழ் தனிப்பட்ட வாகனங்கள் (Personal Vehicles) 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஃபிட்னஸ் சோதனைக்கு செல்ல வேண்டும்.

அதே சமயம் 15 ஆண்டுகள் நிறைவடைந்த வர்த்தக வாகனங்களுக்கு (Commercial Vehicles) ஃபிட்னஸ் சோதனை அவசியம். இந்தியாவில் பழைய வாகனங்களால் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவேதான் தற்போது பழைய வாகனங்கள் மீதான அரசின் பிடி இறுகியுள்ளது. பழைய வாகனங்கள் அழிக்கப்படும்பட்சத்தில், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகமாக இருப்பதால்தான், அங்கு விதிகள் கடுமையாக உள்ளன. எனினும் டெல்லியில் போதுமான அளவு ஸ்கிராப்பிங் மையங்கள் இல்லாத காரணத்தாலும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இட வசதி இல்லாததாலும், விதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் வாகனங்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஆனால் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்வதால், வரும் காலங்களில் நடவடிக்கை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காற்று மாசுபாடு பிரச்னைக்கு எதிரான போரில் எலெக்ட்ரிக் வாகனங்களையும் டெல்லி மாநில அரசு ஈடுபடுத்தி வருகிறது. அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

மானியங்களை வழங்குவதன் மூலமும், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை டெல்லி அரசு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தலைநகரமாகவும் டெல்லி திகழ வேண்டும் என்பது அம்மாநில அரசின் எண்ணம்.

அரசின் நோக்கத்திற்கு ஏற்ப டெல்லி மக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளனர். சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து விட்டால், மக்கள் இன்னும் தைரியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த முன்வருவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








