விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த ஆளில்லா இயங்கும் எலக்ட்ரிக் கார் ஒன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் விபத்திற்குள்ளாகி உள்ளது.

அமெரிக்காவில் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான 2019 டெஸ்லா மாடல் எஸ் காரின் முன்பக்கத்தில் ஒருவரும் பின்பக்கத்தில் ஒருவரும் என இருவர் பயணித்து வந்துள்ளனர். டெக்ஸாஸில் வுட்லாண்டிற்கு அருகே சாலை ஒன்றில் வளைவில் திரும்பு போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதி வேகத்தில் சென்ற இந்த ஆளில்லா டெஸ்லா கார் வளைவில் திரும்பும்போது நேராக அருகில் இருந்த மரத்தில் போய் மோதி உள்ளது. தொடர்ந்து தீ உருவாகி எரிய ஆரம்பத்தில் தான் இரு உயிர்கள் இறந்துள்ளன.

இந்த தீயை சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர். இதற்கு டெஸ்லா உடனே எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

செய்திகள் பரவிய சில மணிநேரத்திற்கு பின்னர் டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலன் மஸ்க், மற்ற வாகனங்களை காட்டிலும் ஆட்டோபைலட் கார்கள் 10 மடங்கு குறைவாக விபத்துகளில் சிக்குவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காரில் இருந்த இரு உடல்கள் இருக்கும் நிலையை வைத்தும், சில ஆதாரங்களை வைத்தும் ஓட்டுனர் இல்லாமலே இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரை யாரும் இயக்கி வரவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு சரியான காரணம் இதுவரையில் தெரியப்படவில்லை. டெஸ்லாவின் ஆட்டோபைல்ட் வசதி சரியாக செயல்படவில்லையா என்பதும் தெரியவில்லை.

டெஸ்லா தீ விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், பயணிகள் ஓட்டுனர்-உதவி வசதியை தவறாக பயன்படுத்துவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுனர் இல்லாத கார் என்ற பாசாங்கை நிறுத்தும் நேரமும் இதுதான் எனவும் அவர்கள் காட்டமாக கூறி வருகின்றனர்.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இது போன்ற பல டெஸ்லா கார் விபத்துகளை விசாரித்துள்ளது. ஆனால் இந்த சமீபத்திய விபத்து குறித்து விசாரிப்பதை இன்னும் திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








