இதெல்லாம் ரொம்ப ஓவர்... போலீஸார் ரோந்து பணிக்கு டர்போசார்ஜ்டு லக்சரி காரா!!
துபாய் போலீஸாரின் ரோந்து படையில் புதிய டர்போசார்ஜ்டு லக்சரி எஸ்யூவி கார் ஒன்று இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நமது இந்திய போலீஸார்கள் மிகவும் விலைமிக்க லக்சரி கார்களை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் எல்லாம், குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளுக்கு இணையாக தாங்களும் இருக்க வேண்டும் என போலீஸார் நினைக்கின்றனர்.

இதனால் தப்பித்து செல்லும் குற்றவாளிகளை பிடிக்க அவர்களது கார்களை காட்டிலும் ஆற்றல்மிக்க, செயல்திறன்மிக்க லக்சரி கார்கள் தான் வெளிநாட்டு போலீஸாரின் ரோந்து படையில் இணைக்கப்படுகின்றன.

இந்த வகையில் தான் துபாய் போலீஸார் தங்களது அலுவலக பணிக்காகவும், ரோந்து பணிக்காகவும் 2021 ஜெனிசிஸ் ஜிவி80 என்ற லக்சரி எஸ்யூவி காரை வாங்கியுள்ளனர். துபாய் போலீஸார் இவ்வாறான விலையுயர்ந்த கார்களையும், டுகாட்டி பனிகளே வி4 போன்ற விலையுயர்ந்த பைக்குகளையும் வாங்குவதை பல முறை நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.

ஜெனிசிஸ் ஜிவி80 கார் பக்கம் வருவோம். ஜெனிசிஸ் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸின் லக்சரி கார் பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மிகவும் விலையுயர்ந்த கார்கள் ஜெனிசிஸ் பிராண்டில் இருந்தே வெளிவருகின்றன.

ஜிவி80 போன்ற எஸ்யூவி மாடல்கள் மட்டுமின்றி செடான், கூபே கார்களும் இந்த லக்சரி பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளன. துபாய் போலீஸார் வாங்கியுள்ள ஜிவி80 காரில் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு 3.5 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல் போர்ஷே, மெக்லாரன், ஃபெராரி, புகாட்டி என தற்கால மாடர்ன் ஸ்போர்ட்ஸ் கார்கள் அனைத்தும் துபாய் போலீஸாரிடம் இருந்தாலும், ஜெனிசிஸ் ஜிவி80 நிச்சயம் அவர்களுக்கு வித்தியாசமான பயண அனுபவத்தை வழங்கும், அதற்கு தேவையான கூறுகள் அனைத்தும் இந்த லக்சரி எஸ்யூவி காரில் உள்ளன.

இந்த ஜெனிசிஸ் காரை தேர்வு செய்தது குறித்து துபாய் போலீஸ் போக்குவரத்து & மீட்பு துறையின் இயக்குனர் மொஹமது அல் ரசூக்கி கருத்து தெரிவிக்கையில், நாங்கள் மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.

மற்றப்படி இந்த லக்சரி வாகனங்களை பெருமையுடன் காட்ட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மக்களுடன் எந்த அளவிற்கு சகோதரத்துவத்துடன் உள்ளோம் என்பதை மற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு காட்டவே எப்போதும் ஆசைப்படுகிறோம் என தெரிவித்தார்.

துபாயில் உள்ள அனைத்து குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போலீஸாரின் பணிகளுக்காகவும் துபாய் போலீஸின் பொது கட்டளைக்கு இணங்க செயல்பட உள்ளதில் பெருமிதம் கொள்கிறோம் என ஜெனிசிஸ் பிராண்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








