அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அதிரடி நடவடிக்கை... அனைத்து மாநிலங்களுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் டெல்லி!
டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மொத்த வாகனங்களின் விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த ஓராண்டு காலத்தில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. டெல்லி மாநில அரசு தற்போது இந்த தகவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2020 ஜூலை வரையிலான காலகட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 1.2 சதவீதம் உயர்ந்தது.

இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூலை வரையிலான காலகட்டத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூலை வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 1,013ல் இருந்து 2,243 ஆக உயர்ந்துள்ளது. அதாவது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

அதே சமயம் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை 813ல் இருந்து 1,002 ஆக உயர்ந்துள்ளது. இது 20 சதவீத வளர்ச்சியாகும். டெல்லியில் தற்போதைய நிலையில் 1,12,321 எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அம்மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே மிக சிறந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதின் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அம்மாநில அரசு தீவிரமாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவை இரண்டும்தான் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வழக்கமான ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

எனவேதான் டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மிக வேகமாக ஊக்குவித்து வருகிறது. டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான முயற்சிகள் அனைத்தும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக டெல்லி முழுவதும் உள்ள அனைத்து டெல்லி போக்குவரத்து கழக டெப்போக்களிலும் பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லி மாநில அரசு விரைவில் கையெழுத்திட உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இஇஎஸ்எல் (Energy Efficiency Services Limited - EESL) நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

டெல்லி தவிர குஜராத், கர்நாடகா உள்பட பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. ஒன்றிய அரசும் தன் பங்கிற்கு, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான பொதுமக்களின் கவனம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த சூழலில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து முன்பதிவுகள் குவிந்துள்ளன. எனவே விலை சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








