இ-வாகன விற்பனை பிச்சிக்க போகுது! ஜீரோவில் இருந்து 100சதவீதம் சார்ஜாக 15நிமிஷமே போதும்! புதிய பேட்டரி வெளியீடு!
பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜாக 15 நிமிடங்களே போதும் புதிய பேட்டரியை புதிய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் புதிய வெளியீடுகள்குறித்த சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.

மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் புதிதாக உதயமாகியுள்ளது. 'எக்ஸ்போனென்ட் எனெர்ஜி' (Exponent Energy) எனும் பெயரில் அந்த நிறுவனம் நாட்டில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் மின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகனங்கள் சார்ந்த தொழில்நுட்ப கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இவ்வாறு தனது பணியை நாட்டில் நிறுவனம் செய்ய இருக்கின்றது.

நிறுவனம் தனது அறிமுகத்தை முன்னிட்டு ஓர் புதிய பேட்டரி பேக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இ-பேக் என்ற பெயரிலேயே அப்-பேட்டரி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இ-பம்ப் எனப்படும் மின் வாகன சார்ஜிங் கருவியையும் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

இவ்விரு புதிய வெளியீடுகளும் அனைத்து மின் வாகனங்களுக்குமானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருசக்கர மின் வாகனம், இ-ஆட்டோ, இ-கார் மற்றும் இ-ட்ரக் என அனைத்திற்குமானதாக புதிய அறிமுகங்கள் இருக்கின்றன. இரண்டும் மிக சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இ-பேக் பேட்டரி வெறும் 15 நிமிடங்களிலேயே முழு சார்ஜை பெற்றுவிடும் திறன் கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம், வெறும் பதினைந்து நிமிடங்களே போதும் இதன் பேட்டரி, பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜை பெற்றுவிடும்.

இதேபோல் இதன் சார்ஜிங் கருவியும் மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ஃப்ளெக்ஸிபில் எனெர்ஜி ஸ்டேக் தொழில்நுட்பத்தின் (Flexible Energy Stack technology) வாயிலாக சாத்தியம் என நிறுவனம் கூறியுள்ளது.

தனது பேட்டரியில் மிக குறைந்த விலை லித்தியம்-அயன் செல்களையே நிறுவனம் பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்கு 3 ஆயிரம் சார்ஜ் சுழற்சிகள் வரை வாரண்டி வழங்க இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. எக்ஸ்போனென்ட் எனெர்ஜி கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும்.

முன்னாள் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் ஊழியர்களால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் முன்னாள் சிபிஓ அருண் விநாயக் மற்றும் ஏத்தர் நிறுவனத்தின் ஹார்ட்வேர் ஸ்ட்ராடெஜிக் சோர்சிங் மற்றும் செல் ஸ்ட்ராடெஜி லீட் பிரிவின் அதிகாரியாக இருந்த சஞ்ஜய் பயல் ஆகியோரால் தொடங்கப்பட்டதே எக்ஸ்போனென்ட் எனெர்ஜி நிறுவனம்.

இருவரின் கூட்டு முயற்சியிலேயே அதிக வேக சார்ஜ் கருவி மற்றும் பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிக விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இத்துடன், மிக விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் பேட்டரி மற்றும் சார்ஜிங் கருவி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான மின் வாகனங்கள் முழுமையாக சார்ஜாக, அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து நூறு சதவீதம் சார்ஜை பெற பல மணி நேரங்களை எடுத்துக் கொள்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் வெறும் 15 நிமிடங்களே போதும் என்ற அதிக வேக சார்ஜிங் தொழில்நுட்பம் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது வரை மின் வாகனங்களை ஒரு சிலர் தயக்கம் காட்டிய வண்ணம் இருக்கின்றனர். அதற்கு சார்ஜிங் மையங்கள் போதியளவு இல்லாதது மற்றும் மிக அதிகம் நேரம் சார்ஜாக எடுத்துக் கொள்வது ஆகிய இரண்டே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் எக்ஸ்போனென்ட் எனெர்ஜி நிறுவனம் அதன் அதிக வேக சார்ஜ் திறன் கொண்ட பேட்டரி மற்றும் சார்ஜிங் கருவியை வெளியீடு செய்திருக்கின்றது. இதுபோன்ற தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications







