பென்ட்லீ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது? வெளியானது புதிய தகவல்!
பென்ட்லீ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் வாகனங்களால் ஏற்படும் மாசு உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், மின்சார வாகனத் தயாரிப்புக்கு அனைத்து நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த வரிசையில் உலகின் மிகவும் பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீ, தனது முதல் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பென்ட்லீ நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை, அதே குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆடி கார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க உள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அர்டெமிஸ் கட்டமைபை்புக் கொள்கையின் இந்த கார் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், தனது முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2025ம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதற்கும் பென்ட்லீ திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, படிப்படியாக முழுமையான எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாக மாறுவதற்கான திட்டமும் உள்ளது.

இதுதவிர்த்து, இடைக்கால வர்த்தகத்தை மனதில் வைத்து, தனது ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய கார்களின் பிளக் இன் ஹைப்ரிட் வகை மாடல்களையும் உருவாக்கும் முயற்சிகளில் பென்ட்லீ ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு பிளக் இன் ஹைப்ரிட் வகை கார்களின் உருவாக்கப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விரைவில் இந்த கார்களை சந்தைக்கு கொண்டு வரும் திட்டமும் பென்ட்லீ வசம் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் உள்ள பல கார் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதே வழியை பின்பற்றி பென்ட்லீ நிறுவனம் தனது எதிர்கால வர்த்தகத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் மின்சார வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








