ஏப்ரல் முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!
வரும் ஏப்ரல் 1 முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு கொரோனாவால் கார் விற்பனை பெரும் பிரச்னையை சந்தித்ததால், அதனை அதிகரிக்கும் விதமாக விலை உயர்வு என்ற அஸ்திரத்தை எடுக்காமல் கார் நிறவனங்கள் தவிர்த்து வந்தன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கார் விற்பனை படுஜோராக இருந்து வருவதால், துணிச்சலாக கார் விலையை அவ்வப்போது உயர்த்தும் முடிவை எடுத்து வருகின்றன. அந்த வகையில், புத்தாண்டில் பல நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.

காலாண்டுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதை தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. அந்த வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. வரும் 1ந் தேதி முதல் கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஆகிய கார்களின் விலையை உயர்த்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக 1.5 முதல் 2 சதவீதம் என்பது சாதாரண விலை உயர்வாக இருக்கும். ஆனால், ஃபோர்டு கார் நிறுவனம் அதிகபட்சமாக கடைபிடிக்கப்படும் 3 சதவீதம் அளவுக்கு கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதனால், சில ஃபோர்டு கார்களின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு அதிக விலை உயர்வை சந்திக்கும் நிலை உள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக, இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஃபோர்டு எடுக்க உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.66 லட்சம் ஆரம்ப விலையில் இருந்தும், ஃப்ரீஸ்டைல் கார் ரூ.7.11 லட்சத்திலும், ஆஸ்பயர் ரூ.7.26 லட்சத்திலும், ஈக்கோஸ்போர்ட் ரூ.8 லட்சத்திலும், எண்டெவர் எஸ்யூவி ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








