ஃபோர்டு கார்களின் விலை அதிகரிப்பு... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு!
உற்பத்தி செலவீனத்தை கருத்தில்கொண்டு, ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்ற விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக எழுந்த அசாதாரண சூழலால், கார் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றது. கார் விற்பனையை அதிகரிப்பதற்காக பல யுக்திகளை கார் நிறுவனங்கள் கையாண்டன. மேலும், கார் விலையையும் உயர்த்தவில்லை.

இந்த சூழலில், இந்த ஆண்டு துவக்கம் முதலே கார் விற்பனை இயல்பு நிலைக்கு வந்ததால், கார் நிறுவனங்கள் ஜனவரியில் விலை உயர்வு நடவடிக்கையை எடுத்தன. இதைத்தொடர்ந்து, காலாண்டு முடிவுற்ற நிலையில், ஏப்ரலிலும் சில நிறுவனங்கள் கார் விலையை அதிகரித்துள்ளன.

அந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதிகபட்சமாக ரூ.80,000 வரை ஃபோர்டு கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஆகிய அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. உற்பத்தி செலவீனம் மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்களின் விலை ரூ.18,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு ஃபிகோ கார் இனி ரூ.5.82 லட்சம் முதல் ரூ.8.37 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

ஃபோர்டு ஆஸ்பயர் கார் விலை ரூ.3,000 வரையிலும், ஃப்ரீஸ்டைல் விலை ரூ.18,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் விலை ரூ.20,000 வரையிலும், எண்டெவர் எஸ்யூவி விலை ரூ.80,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், விலை உயர்வு குறித்த முழுமையான விபரங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்டு டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








