உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
உதிரிபாக சப்ளை பிரச்னையால், சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையிலும் கார் ஆலைகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னை மற்றும் சனந்த் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.

கார் உற்பத்திக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகத்தின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கார் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கார் ஆலையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உதிரிபாக சப்ளையில் இருக்கும் தடங்கலை மனதில் வைத்து, வரும் 24ந் தேதி வரை சென்னை ஆலையில் உற்பத்தியை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சனந்த் ஆலையிலும் கூட உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. செமி கன்டக்டர் உதிரிபாகங்கள் சப்ளையில் இருக்கும் பிரச்னையால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியில் தொடர்ந்து சில மாதங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது.

இதனால், புதிய ஃபோர்டு கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்று அதிகரிக்கும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சப்ளை செய்வதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும்.

நடப்பு காலாண்டில் சென்னை மற்றும் சனந்த் கார் ஆலைகளில் கார் உற்பத்தி 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருப்பதாகம் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 7,000 கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 65,000 கார்களை ஃபோர்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








