எல்லாம் முடிந்தது!! கடைசி ஃபோர்டு கார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றம் - உணர்ச்சிவசப்பட்ட பணியாளர்கள்
குஜராத், சனந்த் தொழிற்சாலையில் இருந்து கடைசி ஃபோர்டு கார் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோர்டு தொழிற்சாலை பணியாளர்களின் உணர்ச்சிவசமிக்க நிகழ்வாக அமைந்துள்ள இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் 25 வருட கார்கள் விற்பனை பயணத்திற்கு ஒரு முடிவாக, நம் நாட்டில் கார்கள் தயாரிப்பை நிறுத்தி கொள்ளவுள்ளதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ஃபோர்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தயாரித்துவந்த கார்களின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஆரம்ப காலக்கட்டத்தில் நுழைந்த வெளிநாட்டை சேர்ந்த கார் பிராண்ட் ஃபோர்டு ஆகும். ஆனால் இந்த அமெரிக்க நிறுவனம் நம் இந்தியர்களை கவர்வதில் சற்று கோட்டைவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில், இந்திய தொழிற்சாலைகளில் இந்த நிறுவனம் 5 மாடல்களை தயாரித்து வந்தது.

இதில் ஈக்கோஸ்போர்ட், எண்டேவியர் என உலகளவிலான மக்கள் விரும்பக்கூடிய தரமான கார்கள் அடங்கினாலும், நம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பட்ஜெட் ரக கார்களில் ஃபோர்டின் ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் & அஸ்பியர் போன்ற கார்கள் கவனத்தை பெறவில்லை. ஈக்கோஸ்போர்ட்டும் பெரும்பான்மையாக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

இதனால் இந்திய பயணிகள் வாகன பிரிவில் வெறும் 1.7% என்ற அளவிலேயே சந்தை பங்கை ஃபோர்டு சமீப காலமாக கொண்டிருந்தது. மொத்த 100%-க்கு 1.7% என்பது மிக குறைவு. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற அறிவிப்பு வெளிவரும் வரையில் மிகவும் குறைந்த அளவிலான கார்களே ஃபோர்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வந்தன.

அறிவிப்பு வெளிவந்த பிறகு கார் பாகங்கள் புதியதாக தயாரிக்கப்படுவதும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் நிறுத்தி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் ஸ்டாக்கில் இருந்து பாகங்களை கொண்டு கடைசி ஃபோர்டு கார் குஜாரத்தில் மாநிலத்தில் உள்ள ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபோர்டிற்கு சனந்த் தொழிற்சாலை, சென்னை தொழிற்சாலை என இரு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெரும்பான்மையான கார் தயாரிப்பு பணிகள் சனந்த் தொழிற்சாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை தொழிற்சாலை ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த கடைசி ஃபோர்டு (ஃபிகோ) வெளியேற்றப்பட்டிருப்பதும் சனந்த் தொழிற்சாலையில் தான்.

Image Courtesy: Labour News - India
சனந்த் தொழிற்சாலையில் ஃபிகோ, அஸ்பியர் மற்றும் ஃப்ரீடைல் கார்களை ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வந்தது. இவற்றிற்கு மாருதியின் இரட்டை கார்கள் எனப்படும் ஸ்விஃப்ட்- டிசைர் முக்கிய போட்டிகளாக விளங்கின. ஆனால் மாதத்திற்கு அதிகப்பட்சமாக 40 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாருதி இரட்டை கார்களை விற்பனையில் ஃபோர்டின் இந்த 3 கார்கள் முந்தியதே கிடையாது.

மாருதி சுஸுகி போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் போட்டியிடாத, அல்லது குறைந்த ஆதிக்கத்தை கொண்ட பிரிவாக பார்த்தே ஃபோர்டு தனது கார்களை களமிறக்கியது. உண்மையில் இந்த இடத்தில் தான் ஃபோர்டு தோற்றுவிட்டது என கூற வேண்டும். கியா, எம்ஜி மோட்டார் போன்ற சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைந்த நிறுவனங்கள் முக்கியமாக போட்டி மிகுந்த பிரிவிலேயே தங்களது கார்களை களமிறக்கியுள்ளன.

இதனால் அவற்றினால் முதல் கார் மாடலில் இருந்தே வெற்றியை ருசிக்க முடிந்தது. ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவுக்கு வருவதை அடுத்து சென்னை தொழிற்சாலை அடுத்த ஆண்டு மத்தியில் மூடப்படும் என தெரிகிறது. இதனால் இப்போதில் இருந்து சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை கைப்பற்றும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் இறங்கிவிட்டது.

இதற்காக சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் நமது தமிழக முதல்வரை நேரில் சந்தித்து ஆலோசித்ததை நமது செய்திதளத்தில் கூட பதிவிட்டு இருந்தோம். இது மட்டும் நடந்தால், வேலை பறிப்போகும் சூழலில் உள்ள ஆயிரக்கணக்கான ஃபோர்டு ஊழியர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். இந்த இரு இந்திய தொழிற்சாலைகளுக்காக ஃபோர்டு மொத்தம் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் 5வது ஆட்டோமொபைல் நிறுவனமாக ஃபோர்டு மோட்டார் விளங்குகிறது. இதன் முன்னர் மேன் ட்ரக்ஸ், ஃபியாட், ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி-டேவிட்சன் மற்றும் யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விடைப்பெற்று இருந்தன. இவை அனைத்தின் வெளியேற்றத்திற்கும் காரணம் ஒன்று தான், குறைந்த விற்பனை.


Click it and Unblock the Notifications








