2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கப்போகும் ஜெனிவா மோட்டார் ஷோ... தேதிகள் அறிவிப்பு!
கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட ஜெனிவா சர்வதேச மோட்டார் ஷோ மீண்டும் நடைபெற இருக்கிறது. இதற்காக முன்கூட்டியே தேதிகள் விபரத்தையும் ஜெனிவா மோட்டார் ஷோ ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

உலக அளவில் உள்ள வாகன பிரியர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினரின் அதிக கவனத்தை ஈர்த்த பழமையான மோட்டார் வாகன கண்காட்சி என்ற பெருமையை ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஜெனிவா மோட்டார் ஷோ தள்ளிப் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், கொரோனா பரவலின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையுடன் வரும் 2022ம் ஆண்டில் ஜெனிவா மோட்டார் ஷோவை நடத்துவதற்கு அந்த கண்காட்சியை ஏற்பாடு செய்யும் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 முதல் 27 வரை ஜெனிவா மோட்டார் ஷோ நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

வரும் ஜூலை மாதம் மத்திக்குள் ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்க விருப்பம் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வழக்கம்போல் முதல் இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகளும், பின்னர் பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய நடைமுறைகளில் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட சூழலில் இந்த கண்காட்சி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2022ம் ஆண்டு 91வது எடிசனாக ஜெனிவா மோட்டார் ஷோ நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் நடைபெறும். எனினும், கொரோனா பரவல் சூழலை பொறுத்து, முடிவுகள் மாறுபடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜெனிவா மோட்டார் ஷோ நடைபெற இருப்பது வாகன பிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை திட்டமிட்டு, எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்துவதற்கான ஆலோசனைகளில் ஜெனிவா மோட்டார் ஷோ அமைப்பாளர்கள் இறங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications








