விலையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம்... எவ்ளோனு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு கோவா அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக 55 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக 25 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. இதற்கான வரைவு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. அதே சமயம் 500 மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 1 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

இதுதவிர 500 நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 14 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 25 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மானியம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரே தவணையாக மானியம் வழங்கப்பட்டு விடும். கோவாவில் வாகன அடர்த்தி மிகவும் அதிகம். உலகில் வாகன அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றாக கோவா கருதப்படுகிறது. ஆனால் இந்த வாகனங்களால் காற்று மாசடைந்து வருகிறது.

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களை ஊக்குவித்து, காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஏராளமானோர் தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால் அரசு மானியம் வழங்குவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசும், டெல்லி போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக, பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலையை குறைக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு கொள்கையாக கொண்டுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது. அத்துடன் இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் ஆர்வமாக உள்ளனர். இத்தகைய மானிய நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








