இதை யாருமே எதிர்பாக்கல... அரசு ஊழியர்களுக்கு சூப்பரான சலுகை... எல்லாம் ஒரு காரணத்தோடதான் பண்றாங்க!
அரசு ஊழியர்களுக்கு சூப்பரான சலுகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஹரியானா மாநில அரசு தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் தனது ஊழியர்களுக்கு, அதாவது அரசு ஊழியர்களுக்கு, சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள் வாங்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு சலுகைகள் வழங்கப்படும்.

கூடுதலாக ஹரியானா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் எந்தவொரு மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கும் 5 கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும். ஹரியானா எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2021 தொடர்பான கூட்டம் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்றது.

இதில், துணை முதல் அமைச்சர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு துணை முதல் அமைச்சர் துஷ்யந்த் சவுதாலாக இந்த தகவல்களை தெரிவித்தார். ஹரியானா எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2021ஐ உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஏற்கனவே மூன்று சுற்று விவாதங்கள் நடைபெற்று விட்டன.

நான்காவது மற்றும் இறுதி சுற்று ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அடுத்த ஒரு மாதத்தில் ஹரியானா எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2021 வெளியிடப்படும். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாநிலங்களும் தற்போது தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளை அறிவித்து வருகின்றன.

இந்த வரிசையில் ஹரியானா அரசும் எலெக்ட்ரிக் வாகன கொள்கை-2021ஐ வெளியிடவுள்ளது. இதில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் அமைப்பதற்கு தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கங்கள் வழங்கி வரும் ஆதரவு காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையால் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆர்வம் காரணமாகவும், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, டாடா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் தற்போது தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. டாடா நிறுவனம் டிகோர் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களையும், ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரையும், எம்ஜி நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் டாடா நிறுவனம்தான் இதில் முன்னணியில் இருக்கிறது. ஏனெனில் டாடா நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், நெக்ஸான்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக திகழ்கிறது. வரும் காலங்களில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரையும் டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதுதவிர சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் (குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த கார் பெற்றுள்ளது) எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் டூவீலர்களை பொறுத்தவரை டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகின்றன.

இதுதவிர சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் கூட இந்திய சந்தையில் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கூட இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புலனாகிறது.


Click it and Unblock the Notifications








