குடுத்து வெச்சவங்க... பண மழையில் நனைய போகும் குஜராத் மக்கள்... இந்த மேட்டர் தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...
குஜராத் மாநில மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநில அரசு சார்பில் தற்போது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 870 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைப்பதற்கும் இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

மானியம் கிடைப்பதாலும், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் கட்டமைக்கப்படுவதாலும், குஜராத் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்துள்ளார்.

இதன்படி குஜராத் மாநிலத்தில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக கிடைக்கும். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையும், எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் வரையிலும் மானியமாக வழங்கப்படும்.

பயனரின் வங்கி கணக்கிற்கு மானிய தொகை நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்டிஓ-வால் அனுமதிக்கப்படும் எந்தவொரு எலெக்ட்ரிக் வாகனம் என்றாலும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதுதவிர ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களையும் பெற்று கொள்ளலாம்.

குஜராத் மாநில அரசு இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவிப்பதற்கு முன்பதாகவே, ஒன்றிய அரசு சார்பில் ஃபேம் இந்தியா-2 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஒன்றிய அரசும் மானியம் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு சமீபத்தில்தான் மானிய தொகைகளை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு உண்மையிலேயே நல்ல பலன் கிடைக்கும். விலை அதிகம் என்பதால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் அதிக மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் முன்வருவார்கள் என குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை மூலம் குஜராத் மாநிலத்தில் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள். அத்துடன் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

இதில், குஜராத் மாநிலத்தில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவது, எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பது, முதலீடுகளை ஈர்ப்பது, காற்று மாசுபாட்டை குறைப்பது ஆகியவை மிகவும் முக்கியமானவை. அடுத்த 4 ஆண்டுகளில் குஜராத் சாலைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

1.10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள், 70 ஆயிரம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள், அடுத்த 4 ஆண்டுகளில் இயங்கும் என எதிர்பார்ப்பதாக குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தற்போது தெரிவித்துள்ளார்.

புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்கும் குஜராத் மாநில அரசு மானியம் வழங்கவுள்ளது. இதன் மூலம் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை சரி செய்யப்படும். குஜராத் மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








