ஃபோட்டோவா பார்த்த நம்பவே மாட்டீங்க! தலைக்கு மேல் வீல் ஏறியும் ஒன்னுமே ஆகல.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்!
தரமான (பாதுகாப்பான) தலைக்கவசத்தால் இளைஞர் ஒருவர் பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தலைக்கவசம் அத்தியாவசியமானது என காட்டுக் கத்து கத்தினாலும் நம்ம ஊர் இளைஞர்களின் காதுகளுக்கு மட்டும் அது கேட்பதே இல்லை. எத்தனை விதிகள் வந்தாலும், போலீஸ் எவ்ளோ அபராதம் விதித்தாலும் நாங்க ஹெல்மெட் இல்லாமதான் சுத்துவோம் என ஒரு பெரும் பட்டாளமே சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹெல்மெட் இருந்தால் என்ன மாதிரியான நன்மை ஏற்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தலைக்கு மேல் பேருந்தின் வீல் ஏறியும் ஓர் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர், சிறு சிறு காயங்களுடன் தற்போதும் நலமாக இருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர் பாதுகாப்புடன் இருப்பதற்கு, அவர் தரமான ஹெல்மெட்டை பயன்படுத்தியது மட்டுமே காரணம். இதனாலேயே அவர் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியிருக்கின்றார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்குடி ஊராட்சியைச் சேர்ந்தவர் சத்திய சீலன்.

ஐடி ஊழியரான இவர், அவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றிருக்கின்றார். அப்போது, சாலை வளைவில் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மினி பேருந்தில் அவர் மோதியிருக்கின்றார். நேருக்கு நேர் நிகழ்ந்த இவ்விபத்தில் சத்திய சீலனின் இருசக்கர வாகனம் மினி பேருந்து அடியில் புகுந்திருக்கின்றது.

மேலும், இருசக்கர வாகனமும், சத்திய சீலனும் பேருந்தின் பின்சக்கரதத்தில் சிக்கினர். பைக் ஓர் வீலிலும், சத்திய சீலன் மற்றொரு சக்கரத்திலும் சிக்கியிருந்தன. இதனால், பேருந்தில் பயணித்தவர்களும், அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் சத்திய சீலன் எந்தவித பெரிய காயங்களும் இன்றி தப்பினார். மிக தெளிவாக கூற வேண்டுமானால், சத்திய சீலன் பயன்படுத்திய உயர் ரக ஹெல்மெட் அவரை காப்பாற்றியது. மினி பேருந்தின் பின் பக்க வீல் அவரது தலைமீது முழுமையாக ஏறி நின்றிருந்த வேலையிலும் அது (தலைக்கவசம்) அவரின் தலையை பாதுகாத்திருக்கின்றது.

பின்னர், பாதுகாப்பாக சத்திய சீலனை வெளியேற்றிய பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவருக்கு உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சுண்டக்குடியில் ஏற்பட்ட இவ்விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிகழும் என்கின்ற காரணத்தினாலேயே இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் அறிவித்திருக்கின்றது. இதுதவிர, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என புதிய விதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








