ஆக்குவாபிளானிங்கா..! கேள்விப்படாத பேரா இருக்கே! இதனால் என்னென்ன ஆபத்து ஏற்படும் தெரியுமா?
ஆக்குவாபிளானிங் எனப்படும் நீர் எதிர்வினை செயலால் ஏற்படும் ஆபத்து பற்றிய தகவலை இப்பதிவில் வெளியிட்டுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மழையால் ஈரமான சாலை ஒன்றில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று விபத்தைச் சந்திக்கும் காட்சி இணையத்தின் வாயிலாக வைரலாகி வருகின்றது. மழைக் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கமான ஒன்றுதான். இதற்கு அதிக வேகம் ஓர் காரணமாக இருந்தாலும், சாலையும் ஓர் முக்கிய காரணியாக இருக்கின்றது.

பொதுவாக இருசக்கர வாகனங்களே இதில் அதிகம் சிக்குகின்றன. இந்த நிகழ்விற்கு அக்வா பிளானிங் (Aquaplaning) அல்லது ஹைட்ரோ பிளானிங் (Hydroplaning) என அழைக்கப்படுவதுண்டு. அக்வா பிளானிங், ஹைட்ரோ பிளானிங்கா அப்படினா என்னங்க என கேக்குறீங்களா? இதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மழைக் காலங்களில் ஆறு, குளம், குட்டைகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றதோ, இல்லையோ நிச்சயம் சாலைகளில் அதிகளவு நீரை நம்மால் காண முடியும். இத்தகைய சாலையில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதையே அக்வாபிளானிங் அல்லது ஹைட்ரோப்ளானிங் என கூறுகின்றனர்.

அதாவது, நீரால் ஏற்படும் எதிர்வினை செயல். இந்த நிகழ்வை வெளிக்காட்டக் கூடிய ஓர் சம்பவம் பற்றிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கின்றது. சற்று அதிக வேகத்தில் வரும் பென்ஸ் கார் ஒன்று திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஓர் கம்பத்தின் மீது மோதி விபத்தைச் சந்தித்தது.

இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிர்ஷ்டவசமாக விபத்து நேர்ந்தபோது சாலையில் பெரியளவில் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நீரால் ஏற்பட்ட எதிர்வினை செயலினாலேயே இவ்விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த விபத்து நிகழ்வு சற்று பழைய நிகழ்வாகும். நீர் எதிர்வினையால் ஏற்படும் ஆபத்து பற்றிய தகவலை விளக்குவதற்காக இந்த வீடியோவை நாங்கள் பதிவிட்டுள்ளோம்.

டயருக்கும், சாலைக்கும் இடையேயான இணைப்பை தடுக்கும் வகையில் சாலையில் தேங்கியிருக்கும் நீர் செயல்படுகின்றது. இந்த எதிர்வினை செயலை தடுக்க வேண்டுமானால் மழை நீர் நிறைந்த சாலையில் மெதுவாக செல்வது அவசியம். ஏனெனில், இந்த மாதிரியான நேரங்களில் ஸ்டியரிங் வீலைக் கொண்டு கட்டுப்படுத்தினாலும், அது பலனளிக்காது.

குறிப்பாக, தேய்ந்த டயர்கள் கொண்ட கார்களில் இதுமாதிரியான சாலையில் செல்வது இன்னும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே மாதிரியான நேரங்களில் வேகத்தை கூட்ட உதவும் ஆக்சலரேஷனில் இருந்து உங்களின் கால்களை எடுத்து வேகத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

வேகம் குறைந்த பின்னர் திசையை மாற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம். இதுவே நீரால் ஏற்படும் எதிர்வினையின்போது விபத்து ஏற்படாமல் காக்க உதவும். அதேசமயம், மழைக் காலங்களில் அதி வேகத்தைக் குறைத்து மிக மெதுவாக செல்வது இதுபோன்ற தேவையற்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications








