கம்மியான விலையில் கிடைச்சாகூட வாங்கிடாதீங்க... செகண்ட் ஹேண்டில் வாங்குவதை தவிர்க்க வேண்டிய கார் மாடல்கள்!
செகண்ட் ஹேண்டில் வாங்குவதை தவிர்க்க வேண்டிய கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் புதிய வாகனங்களுக்கு இணையாக செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்திய வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்த வண்ணமே இருக்கின்றது. குறைந்த விலை, சுலபமாக வாங்க முடியும் என்கிற பல காரணங்களால் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது.

இந்த டிமாண்ட் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 12 சதவீதம் தொடங்கி 14 சதவீதம் வரை அதிகரிக்க இருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமாதிரியான அமோக வரவேற்பு பயன்படுத்திய வாகனங்களுக்குக் கிடைத்து வருவதனால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான மஹிந்திர மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள்கூட செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

என்னதான் சுலபமாக செகண்ட் ஹேண்டில் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைத்தாலும் அவற்றை வாங்கும்போது அதிகம் கவனம் வேண்டும். குறிப்பாக, செகண்ட் ஹேண்டில் வாங்கப்படும் கார்கள் 50 ஆயிரம் கிமீட்டருக்கு குறைவாக பயணித்திருத்தல் வேண்டும். மேலும், ஒற்றை ஓனரைக் கொண்டிருத்தலும் அவசியம். இவ்வாறு பல விஷயங்களை பார்த்தே செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க வேண்டும்.

அதே நேரத்தில் என்னதான் குறைந்த விலை மற்றும் நல்ல பராமரிப்பில் இருந்தாலும் ஒரு சில கார்களை வாங்கவே வேண்டாம் என வாகத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றில் சிலவற்றையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, செகண்ட் ஹேண்டில் வாங்குவதை தவிர்க்க வேண்டிய சில கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா அரியா (Tata Aria)
2010 தொடங்கி 2017ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையில் இருந்த கார் மாடல் டாடா அரியா. அதிக அம்சங்கள் என நல்ல பேக்கேஜில் விற்பனைக்கு வந்த கார்களில் இதுவும் ஒன்று. ஆனால், இதில் நம்பகத் தன்மைக் குறைவு. எனவேதான் இந்திய சந்தையில் இக்கார் வெற்றி பெற தவறிவிட்டது.

ஹெக்ஸாவின் அடிப்படை தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த கார் மாடலில் டாடா நிறுவனம் பல சிறப்பம்சங்களை வழங்கியது. இருப்பினும், ஓர் பலவீனமான மாடலாகவே காட்சியளித்தது. இதன் விளைவாகவே ஏழு ஆண்டுகளில் இக்கார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது. ஆகையால், இந்த காரை தற்போது செகண்ட் ஹேண்டில் வாங்க வேண்டாம் என கூறப்படுகின்றது.

மஹிந்திரா டியூவி 300 ஏஎம்டி (Mahindra TUV300 AMT)
டியூவி300 மற்றும் கேயூவி100 இவையிரண்டிற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த காரிலும் நல்ல அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இது மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. மிக முக்கியமாக மஹிந்திரா டியூவி300 மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனையாகியது.

ஆகையால், இக்காரை நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது மஹிந்திரா. இந்த மாடலின் ஏஎம்டி பயனர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், செகண்ட் ஹேண்டில் உங்களுக்கு டியூவி ஏஎம்டி வெர்ஷனை வாங்கும் எண்ணம் இருந்தால் அதை சற்றே பரிசீலுத்து பின்னர் வாங்குவது சிறந்தது. தற்போது மஹிந்திரா டியூவி300 காருக்கு பதிலாக பொலிரோ நியோ விற்பனையில் இருக்கின்றது.

ஹோண்டா சிஆர்வி (Honda CRV)
இந்திய சந்தையில் 2007ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரையில் இக்கார் விற்பனையில் இருந்தது. குறைவான விற்பனை எண்ணிக்கை காரணத்தினால் 2013ம் ஆண்டில் இக்கார் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது. இந்த கார் தற்போது செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

குறைவான விலையில் இது கிடைத்தாலும் இதனை பராமரிப்பது சற்று காஸ்ட்லியானது. ஆம், இதன் உதிரிபாகங்கள் முதல் அனைத்தும் பல மடங்கு விலைக் கொண்டதாக இருப்பதாக இதன் தற்போதைய பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், பழைய காருக்கு அதிகளவில் செலவில் செய்வதை தவிர்க்கும் பொருட்டு இந்த காரை பயன்படுத்திய கார்கள் சந்தையில் இருந்து வாங்குவதை தவிர்ப்பது சிறந்தது.

செவ்ரோலட் கேப்டிவா (Chevrolet Captiva)
2012ம் ஆண்டே இந்த கார் கடைசியாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்த ஆண்டாகும். செவ்ரோலட் நிறுவனம் முழுமையாக இந்தியாவையே விட்டு வெளியேறியிருக்கின்றது. இருப்பினும், தனது தயாரிப்புகள் பல தற்போது பயன்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் நிறுவனம் சர்வீஸ் போன்ற குறிப்பிட்ட சேவைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இருப்பினும், நிறுவனத்தின் கேப்டிவா காரை செகண்ட் ஹேண்டில் வாங்குவது சற்று ரிஸ்க் என கூறுகின்றனர். இதன் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிகின்றது.

ஹோண்டா அக்கார்டு 3.5 லிட்டர் வி6 (Honda Accord 3.5L V6)
ஹோண்டா அக்கார்டு இந்திய சந்தையில் 2008ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. லக்சூரி கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஹோண்டா விற்பனைக்கு வழங்கிய கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இதன் வி6 வேரியண்ட் பல்வேறு சிக்கல்களை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இக்னிஷன் கோளாறு, க்ளைமேட் கன்ட்ரோலில் பிரச்னை மற்றும் ரேசியோவில் பிரச்னை என பல்வேறு சிக்கல்களை இது வழங்கி வருகின்றது. ஆகையால், செகண்ட் ஹேண்ட் சந்தையில் இருந்து இக்காரை வாங்குவதை தவிர்ப்பது நல்ல என்கின்றனர்.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் (Mitsubishi Outlander)
செகண்ட் ஹேண்ட் சந்தையில் இருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டிய மாடல்களில் மிட்சுபிஷி அவுட்லேண்டரும் ஒன்று. இந்த கார் இந்திய சந்தையில் 2008 தொடங்கி 2013 வரையில் விற்பனையில் இருந்தது. ஃபியட், செவ்ரோலட் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களை போல் இந்தியாவை விட்டு வெளியேறிய நிறுவனங்களிலும் இதுவும் ஒன்று. எனவே இதை பராமரிப்பதில் லேசான சிக்கல் நிலவி வருகின்றது. எனவேதான் இக்காரை செகண்ட் ஹேண்டில் வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








