மைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்? கசிந்த தகவல்!
ஹைபிரிட் திறனில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல வாகன கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் சிட்டி காரை ஹைபிரிட் தரத்தில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியிட்டது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை அடுத்து ஹோண்டா வாகன பிரியர்களின் கவனம் ஹைபிரிட் சிட்டி காரின் பக்கம் திரும்பியது.

இவர்கள் மட்டுமின்றி அதிக மைலேஜை விரும்பும் வாகன ஓட்டிகளின் கவனமும் ஹைபிரிட் சிட்டி வருகையின் பக்கம் திரும்பியது. இதற்கு புதிய ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரின் அதிக மைலஜ் திறனே முக்கிய காரணம் ஆகும். இக்கார் ஹைபிரிட் சிஸ்டத்தைப் பெற இருப்பதால் தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி மாடல் காரைக் காட்டிலும் இது அதிக மைலேஜே வழங்கும் என கூறப்படுகின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 27 கிமீ வரையிலான மைலேஜை வழங்கும் என்பது தெரியவந்திருக்கின்றது. எனவேதான் அநேகரின் கவனம் இக்காரின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியிருக்கின்றது. ஆட்டோகார் இந்தியா (autocarindia) தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இக்கார் 2021ம் ஆண்டின் மத்தியிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதாவது, 2021 தீபாவளிக்கு முன்னரே இக்கார் விற்பனைக்கு வந்துவிடும் என ஆட்டோகார் இந்தியா கூறியிருக்கின்றது. புதிய ஹைபிரிட் சிஸ்டத்தின் காரணமாக சற்று விலையுயர்ந்த காராக ஹோண்டா சிட்டி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 15 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. பெட்ரோல்-எலெக்ட்ரிக் ஹைபிரிட் திறன் கொண்ட எஞ்ஜினே இக்காரில் இடம்பெற இருக்கின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 98 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இதற்காக 1.5 லிட்டர் அட்கின்ஸ்டன் சைக்கிள் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இது ஐஎஸ்ஜி (integrated starter generation) எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். தொடர்ந்து, இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் 109 பிஎச்பி வரையிலான திறனை வெளிப்படுத்தும். இதே திறன் கொண்ட ஹைபிரிட் சிஸ்டத்தைதான் உலகளவில் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை ஜாஸ் கார் பெற்றிருக்கின்றது.

புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை ஹோண்டா சிட்டி பெற இருப்பதால் இக்காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் டிரைவ், ஹைபிரிட் டிரைவ் மற்றும் எஞ்ஜின் டிரைவ் இவையே அந்த மூன்று டிரைவிங் மோட்கள் ஆகும்.

இதில், எலெக்ட்ரிக் டிரைவ் மோடினைப் பயன்படுத்தும்போது மின்சார மோட்டார் மட்டுமே இயங்கும். இதன் வாயிலாக செல்லும்போது குறைந்த வேகத்தில் மட்டுமே கார் பயணிக்கும். அதுவே ஹைபிரிட் மோடினைப் பயன்படுத்தினால் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரு எஞ்ஜின்களும் இணைந்து இயங்கும்.

இதன்மூலம், அதிக மைலேஜ் மற்றும் அடக்கமான எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டை பெற முடியும். அதேசமயம், வெறும் பெட்ரோல் எஞ்ஜினை மட்டும் பயன்படுத்தினால் அதி-வேக ஓடும் திறனை ஹோண்டா சிட்டி வெளிப்படுத்தும். இந்த சூப்பர் திறன் எஞ்ஜினுடன் சிறப்பு வாய்ந்த பிரீமியம் கருவிகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், 7 இன்ச் அளவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி பிரேக்கிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹைபீம் மின் விளக்கு வசதி என எக்கசக்க சிறப்பு வசதிகள் புதிய ஹைபிரிட் சிட்டி காரில் இடம்பெற இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








