கோவிட்-19 நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு உதவி செய்யும் ஹோண்டா... கண்டிப்பா பாராட்டியே ஆகணும்...
கோவிட்-19 நோயாளிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மையங்களை ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் அமைத்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்புகளை பெருக்கும் விதமாகவும், கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவி செய்யும் வகையிலும், இந்த நடவடிக்கையை ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் எடுத்துள்ளது.

குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் வகையில் இந்த முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் நவ்ரங்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் 100 படுக்கைகள் உள்ளன. அதே சமயம் ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் 50 படுக்கைகள் உள்ளன.

ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் இங்கு நோயாளிகளை கண்காணிப்பார்கள். அத்துடன் இந்த மையங்களில், இதர மருத்துவ சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் என்பது, இந்தியாவில் உள்ள ஹோண்டா குழும நிறுவனங்களின், கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவாகும். இதன் மூலம் சமூகத்திற்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவிட்-19 நிவாரண பணிகளை பொறுத்தவரை ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனேசர் (ஹரியானா), ஆழ்வார் (ராஜஸ்தான்), கோலார் (கர்நாடகா) மற்றும் கௌதம புத்தா நகர் (உத்தர பிரதேசம்) ஆகிய பகுதிகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளையும் ஹோண்டா அமைத்து வருகிறது. மேலும் முன்கள பணியாளர்களுக்கு பிபிஇ கிட்கள், முக கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் ஆகியவற்றையும் ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கி வருகிறது.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களையும் ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கி வருகிறது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டுள்ளது.

எனவே பல்வேறு மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தற்போது ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்களின் சாலைகளில் மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் வரும் வாரங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








