வேற லெவலுக்கு மாறும் கார் பயணம்... லெவல்-3 தானியங்கி தொழில்நுட்பத்துடன் வந்த ஹோண்டா கார்!
உலகின் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட தானியங்கி கார் மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. லெவல்-3 தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட இந்த காரின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி தொழில்நுட்ப கார்களை உருவாக்குவதற்கு உலக அளவில் பல நிறுவனங்கள் கங்கணம் கட்டி வேலை பார்த்து வருகின்றன. இதற்காக, தனி நகரங்களையே உருவாக்கி சோதனைகளை செய்து வருகின்றன. இதில், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடதக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

இந்த சூழலில், ஹோண்டா நிறுவனமும் லெவல்-3 தொழில்நுட்ப அம்சத்துடன் ஹோண்டா லெஜென்ட் என்ற தானியங்கி கார் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவும் நெடுஞ்சாலைகளில் தானியங்கி முறையில் செல்வதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

தானியங்கி கார்கள் லெவல் 0 முதல் லெவல் 5 வரை வகைப்படுத்தப்படுகின்றன. இதில், 5 என்பது முழுமையான தானியங்கி காரை குறிக்கும். எனவே, ஹோண்டா லெஜென்ட் கார் கிட்டத்தட்ட முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தை நெருங்குவதற்கான ஆரம்ப நிலையாகவே கருத முடியும்.

மேலும், இதுபோன்ற கார்களை பொது சாலையில் இயக்குவதற்கு சில நாடுகளில் மட்டுமே அனுமதி உள்ளது. வரும் காலத்தில் இந்த கார்களின் தொழில்நுட்பம் மீது அதிக நம்பகத்தன்மை ஏற்படும்பட்சத்தில், பரவலாக அனைத்து நாடுகளிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முதல்கட்டமாக ஜப்பானில் மட்டும் 100 யூனிட்டுகள் விற்பனைக்கு செல்ல இருக்கின்றன. இந்த கார்கள் விற்பனையை நோக்கமாக கொண்டு அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு செய்யப்படாது.

நடைமுறை பயன்பாட்டில் இந்த கார்கள் எவ்வாறு இருக்கின்றன, சந்தையில் எந்தளவு வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

அவசர சமயங்களில் ஓட்டுனர் காரின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கான எச்சரிக்கை வழங்கப்படும். அப்படி இல்லாத பட்சத்தில், தானியங்கி முறையில் பிரேக் பிடித்து காரை நிறுத்திவிடும். இந்திய மதிப்பில் ரூ.74 லட்சத்தில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








