ஹோண்டாவின் புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி, இசட்.ஆர்-வி!! விரைவில் உலகளவில் வெளியீடு!
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹோண்டா நிறுவனம் உலகளவில் விற்பனை செய்யப்பட உள்ள அதன் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பற்றியும், இந்த புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி கார் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தோனிஷியா நாட்டில் 11ஆம் தலைமுறை சிவிக் ஆர்எஸ் மற்றும் முற்றிலும் புதிய சிட்டி என இரு புதிய தலைமுறை செடான் கார்களை ஹோண்டா சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் இவை இரண்டு இல்லாமல், முற்றிலும் புதிய கார் ஒன்றின் டீசர் வீடியோவினையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது.

டீசர் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, இந்த புதிய ஹோண்டா கார் வருகிற நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரையில் இந்தோனிஷியாவில் நடைபெறவுள்ள கைகிண்டோ இந்தோனிஷியா சர்வதேச ஆட்டோ கண்காட்சி (GIIAS)-யில் வெளியீடு செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹோண்டாவின் இந்த புதிய தயாரிப்பு இசட்.ஆர்-வி என்கிற பெயரிலான சப்-காம்பெக்ட் எஸ்யூவியாக இருக்கலாம்.

இது வதந்தியே தவிர்த்து, இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் இதுவரையில் ஹோண்டா வெளியிடவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் உலகளாவிய வெளியீட்டு தேதி உடன் கொடுக்கப்பட்டுள்ள நிழல் போன்ற காரின் உருவத்தை வைத்து பார்க்கும்போது, சப்-காம்பெக்ட் எஸ்யூவிகளின் தோற்றத்தில் இந்த புதிய ஹோண்டா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது முதலாவதாக நமக்கு தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தின் மூலம் பார்க்கையில், ஸ்போர்டியான க்ரில், ட்ரெண்டியான ஹெட்லேம்ப்கள் மற்றும் நேர்த்தியான டிஆர்எல்-களை இந்த ஹோண்டா சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் எதிர்பார்க்கலாம். எஸ்யூவி மாடல் என்பதால் நிச்சயம் அதிகளவிலான வளைவுகளையும், கூர்மையான லைன்களையும் ஹோண்டா வழங்கும் என கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காரின் ஃபெண்டர்களில் மற்றும் வெளிப்பக்க கதவுகளின் கீழ்பகுதியில் தடிமனான பிளாஸ்டிக் பேனல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்திலும் இந்த பகுதியில் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். ஹோண்டா இசட்.ஆர்-வி (எதிர்பார்க்கப்படும் பெயர்) காரில் மெஷின்-கட் அலாய் சக்கரங்கள் வழங்கப்படலாம்.

பின்பக்கத்தில் முன்பக்கத்திற்கு ஏற்ற ட்ரெண்டியான எல்இடி ப்ரேக் விளக்குகள் வழங்கப்படலாம். இவை தவிர்த்த இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காரை பற்றிய மற்ற விபரங்கள் GIIAS-இல் வெளியிடப்படும். இசட்.ஆர்-வி என்கிற பெயரில் உள்ள 'Z' என்பது தற்போதைய இளம் தலைமுறையினரை (1981பின் பிறந்தவர்கள்) குறிப்பதாக கார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ஜென்ரேஷன்-இசட் என அழைக்கப்படுகின்றனர். இந்த புதிய காரை பற்றி ஹோண்டா சார்பில் தெரிவிக்கப்பட்ட ஒரே வரி என்னவென்றால், சர்வதேச சந்தைகளில் இது முற்றிலும் புதிய தயாரிப்பாக இருக்கும் என்பது மட்டுமே ஆகும். இசட்.ஆர்-வி இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்திய சந்தைக்கான புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்திருந்தது. ஏனெனில் இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை மற்ற நாடுகளை காட்டிலும் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள இந்த ஜப்பானிய நிறுவனம் விரும்புகிறது.

நம் உள்நாட்டு போக்குவரத்து, பயண சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் மன ஓட்டம் உள்ளிட்டவை இந்த மாற்றத்திற்கு காரணங்களாக உள்ளன. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மொத்த பயணிகள் வாகனங்களில் கிட்டத்தட்ட 40% எஸ்யூவி கார்களாக எதிர்காலத்தில் விளங்கவுள்ளதாக இப்போதே ஹோண்டா கணித்து வைத்துள்ளது.

முன்னதாக, சிஆர்-வி மற்றும் பிஆர்-வி என்ற இரு எஸ்யூவி கார்களை ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதன்பின் இவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லாததால் நம் நாட்டில் இருந்து நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் தற்போது நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் மட்டுமே டபிள்யூ.ஆர்-வி மாடலை ஹோண்டா கொண்டுள்ளது.

சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் எதுவும் ஹோண்டா பிராண்டில் இருந்து தற்சமயம் விற்பனையில் இல்லை. எனவே வருகிற நவ.11ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ள ஹோண்டா இசட்.ஆர்-வி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் உள்ளிட்டவை போட்டியாக விளங்கும்.


Click it and Unblock the Notifications








