ஹோண்டா கார் வைத்துள்ளீர்களா? அப்போ நீங்கள் தான் முதலில் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை நீட்டிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திரும்ப அழைப்பிற்கு காரணம், எரிபொருள் குழாயில் தவறான பாகம் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பதாகும். மொத்தமாக 77,954 ஹோண்டா கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிகையில் அடங்குகின்றன.

அதாவது இந்த 77,954 ஹோண்டா கார்களில் எரிபொருள் குழாயில் தவறான பாகம் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதனால் பெரிய பிரச்சனை வருவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கார்களை திரும்ப அழைத்து பழுது பார்க்கும் முயற்சியில் ஹோண்டா இறங்கியுள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தோமேயானால், அமேஸ், 4ஆம் தலைமுறை சிட்டி, டபிள்யூஆர்-வி, ஜாஸ், சிவிக், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி உள்ளிட்ட கார்கள் ஹோண்டா அறிவித்துள்ள 77,954 கார்களில் அடங்குகின்றன.

2019 ஜனவரியில் இருந்து 2019 செப்டம்பர் மாதம் வரையில் தயாரிக்கப்பட்ட மேற்க்கூறப்பட்ட ஹோண்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை குறித்து அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்திடம் கேட்டறியலாம்.

மொத்த 77,954 கார்களில் 36,086 அமேஸ் காம்பெக்ட்-செடான் கார்களும், 20,248 சிட்டி கார்களும், 7,871 டபிள்யூஆர்-வி கார்களும், 6,235 ஜாஸ் கார்களும், 5,170 சிவிக் கார்களும், 1,737 பிஆர்-வி கார்களும், 607 சிஆர்-வி எஸ்யூவி கார்களும் அடங்குகின்றன.

எரிபொருள் குழாயில் தவறான பாகம் பொருத்தப்பட்டதினால் என்ஜினிற்கு எரிபொருள் செல்வது தடைப்படலாம். இதன் காரணமாக கார் அடிக்கடி நின்றுவிடும், மீண்டும் ஸ்டார்ட் ஆகாது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம் இந்த தவறான பாகத்தினால் எரிப்பு செயல்முறையில் ஈடுப்படும் மற்ற பாகங்கள் பழுதடையலாம். தவறான எரிபொருள் குழாயினை சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஹோண்டா பிராண்டின் டீலர்ஷிப்களின் மூலமாக இலவசமாக மாற்றி கொள்ளலாம்.

தவறான எரிபொருள் குழாய் பொருத்தப்பட்ட கார்களை வாங்கியவர்களை இன்று (ஏப்ரல் 17) முதல் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை தொடர்பாக ஹோண்டா நிறுவனம் தொடர்பு கொள்ளவுள்ளது.

உங்களது ஹோண்டா காரும் இந்த நடவடிக்கையில் உட்படுகிறதா என்பதை ஹோண்டா செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள மைக்ரோ-தளத்தின் மூலம் அறியலாம். இங்கு வாகன அடையாள எண் கேட்பார்கள்.

அதை வைத்து உங்களது கார் இந்த நடவடிக்கையில் உட்படுகிறதா இல்லையா என்பதை அறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியாவில் டீலர்ஷிப்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் செயல்பாட்டில் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








