90 டிகிரி திரும்பும் வீல்... ரிவர்ஸ் எடுக்கனும்ற அவசியமே இருக்காது... ஹூண்டாய் நிறுவனத்தின் தரமான வசதி!
ஹூண்டாய் நிறுவனம் அதன் எதிர்கால மின்சார கார் ஒன்றில் 90 டிகிரி திரும்பக் கூடிய வீலை அறிமுகம் செய்திருக்கின்றது. இ-கார்னர் மோட்யூல் எனும் முன்மாதிரி எலெக்ட்ரிக் வாகனத்திலேயே இந்த வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வாகன இயக்கத்தை மேலும் சுலபமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வீல் குறித்த இன்னும் முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனமே தற்போது புதிதாக 90 டிகிரி திரும்பும் வீலை உருவாக்கியிருக்கின்றது. வாகன இயக்கத்தை மேலும் சுலபமாக்கும் வகையில் இப்புதிய தொழில்நுட்பத்தை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெயர்போன நிறுவனமாக ஹூண்டாய் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 90 டிகிரி திரும்பும் வீலை நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ளது. இதனை தனது எதிர்கால மின்சார வாகனங்களில் ஹூண்டாய் நிறுவனம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் மொபிஸ் தனது 90 டிகிரி திரும்பும் சக்கரத்தை இ-கார்னர் மோட்யூல் (e-corner module) எனும் எலெக்ட்ரிக் வாகனத்தில் தற்போது பயன்படுத்தியிருக்கின்றது. இரண்டுமே முன்மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்புதிய வீலைக் கொண்டு மிகவும் நெருக்கமான இடைவெளியில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும் அப்பகுதியில் இருந்து வாகனத்தை மிகவும் சுலபமாக வெளியேற்றிவிடலாம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வசதியை மட்டுமின்றி புதிய எலெக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டியரிங் ஆகியவற்றை இ-கார்னர் மோட்யூலில் பயன்படுத்தியிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "எலெக்ட்ரிக் கார்னர் மோட்யூலை நாங்கள் ஓர் முன் மாதிரி மாடலாக உருவாக்கி இருக்கின்றோம். இதில், புதிய ஸ்டியரிங், பிரேக்கிங், சஸ்பென்ஷன் மற்றும் அனைத்து வீல்களுக்குமான ஸ்டியரிங் சிஸ்டம் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, "இந்த எலெக்ட்ரிக் கார்னர் மோட்யூலை முதன் முதலில் சிஇஎஸ் 2018 லாஸ் வேகாஸில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தினோம். இன்னும் இதன் உருவாக்கம் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது. மூன்று ஆண்டுகளாக வாகனத்தின் உருவத்தை மாற்றியமைத்தல் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களைச் சேர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "நிஜ உலகிற்கான வாகனமாக இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக" நிறுவனம் அறிவிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான வாகனங்களில் வீல்கள் 30 டிகிரி வரை மட்டுமே சுழலும். ஆனால் இ-கார்னர் மோட்யூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீல்கள் 90 டிகிரி வரை நேராக திரும்பும்.

இந்த வசதிக் கொண்ட வாகனம் மிகவும் இக்கட்டான இடத்தில் மாட்டிக் கொண்டால், அதாவது, மிகவும் நெருக்கமாக முன் மற்றும் பின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டால், ரிவர்ஸ் போன்ற எந்த அசைவும் இன்றி அப்படியே வலது அல்லது இடது நோக்கி நகர்ந்து சென்று விடும். வாகன இயக்கத்தை பல மடங்கு சுலபமாக்கும் வகையில் இவ்வசதியை உருவாக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட வாகனமாகவே இ-கார்னர் மோட்யூல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல வசதிகளை இந்த மின்சார வாகனம் பெற இருக்கின்றது. ஆனால், அவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 2 எலெக்ட்ரிக், 1 எம்பிவி என மொத்தம் மூன்று புதுமுக வாகனங்களை இந்தியாவில் விரைவில் களமிறக்க இருக்கின்றது.

இந்தியர்களை புதுமுக வாகனங்களைக் கொண்டு கவரும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே புதிதாக இந்திய சந்தைக்காக நிறுவனம் மூன்று புதுமுக வாகனங்களை ஒதுக்கியிருக்கின்றது. அண்மையில், இந்நிறுவனம் இந்தியாவில் ஹூண்டாய் ஐ20 என் லைன் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமான ஐ20 காரைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாடு வசதிக் கொண்ட காராகும்.


Click it and Unblock the Notifications








