ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.20 கோடி வாரி வழங்கும் பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா?
நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க ரூ. 20 கோடியை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கடும் ஆக்சிஜன் பஞ்சத்தில் இந்தியா தத்தளித்து வருகின்றது. நாட்டின் இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து உலக நாடுகள் பல உதவ முன் வந்த வண்ணம் இருக்கின்றன. எதிரி நாடுகள் என வர்ணிக்கப்பட்டு வந்த பாகிஸ்தான் தொடங்கி சீனா வரை பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன் வந்திருக்கின்றன.

தொடர்ந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் சிலவும் ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள், மருந்துகள் மற்றும் நிதி உதவி என பன்முக உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும் தங்களின் உதவி கரத்தை நீட்ட ஆரம்பித்திருக்கின்றன.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஆக்சிஜன் வாயு பற்றாக்குறையை அறிந்து, இவ்விஷயத்தில் உதவ முன் வந்திருக்கின்றது. இதற்காக நிறுவனம் ரூ. 20 கோடியை கோவிட்-19 நிவாரண தொகையாக நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் அதன் அறக்கட்டளை வாயிலாக இந்த மிகப்பெரிய தொகையை ஒதுக்கியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை மருத்துவமனைகளில் நிறுவுவதற்காக இந்த தொகையை நிறுவனம் ஒதுக்கியிருக்கின்றது.

குறிப்பாக, வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் மாநிலங்களிலான தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, டெல்லி, ஹர்யானா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த நிவாரணத் தொகையைக் கொண்டு முக்கியமான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக மாருதி சுசுகியும் இதேபோன்று அதன் ஹர்யானா தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதாக அண்மையில் அறிவித்தது. இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை கணிசமாக தீர்க்கும் வகையில் இப்பணியில் ஈடுபட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே கொரோனா நிவாரண நிதியாக ஆக்சிஜன் கட்டமைப்பிற்காக ரூ. 20 கோடியை ஹூண்டாய் ஒதுக்கியுள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் அதிகமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை கணிசமாக குறைக்க முடியும்.

தொடர்ந்து, மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை வசதியை மேம்படுத்த ஆள்பலம் தேவைப்பட்டால் தன் ஊழியர்களை அனுப்பி வைக்க இருப்பதாகவும் ஹூண்டாய் அறிவித்திருக்கின்றது. இதுதவிர, நிதி மேலும் தேவைப்பட்டால் அறக்கட்டளை வாயிலாக கூடுதல் தொகையை வழங்கவும் நிறுவனம் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இதுகுறிக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், அறக்கட்டளையின் சிஇஓ-வுமான எஸ்எஸ் கிம் கூறியதாவது, "கோவிட் 19 வைரசின் இரண்டாம் அலை பரவல் பெரும் அச்சுறுத்தலை நாட்டுக்கு ஏற்படுத்தி வருகின்றது. இதன் விளைவாக நாட்டின் முக்கிய நகரங்கள் பல மிக கடினமான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் அரசுக்கு உதவும் வகையில் கணிசமாக பங்கெடுப்பதை எங்கள் கடமையாக பார்க்கின்றோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








