ஹூண்டாய் நெக்ஸோ கார் பற்றி வெளியாகிய ஆச்சர்ய தகவல்... ஒரு முறை ஹைட்ரஜனை நிரப்பினா 1,000 கிமீ பயணிக்கலாம்...
1,000 கிலோமீட்டர்கள் ரேஞ்ஜ் வழங்கக்கூடிய ஹூண்டாய் நெக்ஸோ ஃப்யூவல் செல் கார் பற்றிய மேலும் ஒரு ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றால் இயங்கக்கூடிய எஞ்ஜின் கொண்ட வாகனங்களைப் போலவே ஃப்யூவல் செல்லால் இயங்கக்கூடிய மின்சார வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் வெளிநாடுகள் சிலவற்றில் நெக்ஸோ எனும் பெயரில் ஃப்யூவல் செல் மின்சார காரை விற்பனைச் செய்து வருகின்றது.

இந்த கார் ஃப்யூவல் செல்லைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கி அதன் மூலம் இயங்கும் தன்மைக் கொண்டது. இந்த ஃப்யூவல் செல்லை மின்சாரமாக எனர்ஜியாக மாற்றும்போது ஹைட்ரஜன் மற்றும் வடிகட்டிய நீரை மட்டுமே இக்கார் வெளியேற்றும். இதனால், காற்று மாசு என்பது அறவே இல்லை.

இத்தகைய திறனை நெக்ஸோ கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே கிரீன் என்சிஏபி இக்காருக்கு ஐந்திற்கு ஐந்து என்ற நட்சத்திர ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றது. வெளிநாடுகள் சிலவற்றில் மட்டுமே விற்பனையில் இக்காரை அண்மையில் கிரீன் என்சிஏபி அமைப்பு பலபரீட்சைக்கு உட்படுத்தியது.

அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த ரேட்டிங்கை நெக்ஸோவிற்கு கிரீன் என்சிஏபி வழங்கியிருக்கின்றது. இந்த ரேட்டிங்கின் மூலம் ஹூண்டாய் நெக்ஸோ சுற்றுச்சூழலுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் என்பது எந்தவொரு சந்தேகமுமின்றி தெரிய வந்திருக்கின்றது.

க்ரீன் என்சிஏபி அமைப்பானது எலெக்ட்ரிக் மற்றும் பசுமை தர வாகனங்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. சுத்தமான காற்று, ஆற்றல் மற்றும் பசுமைவீடு விளைவு ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் தனது பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றது. இவற்றின்கீழ் செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே ஹூண்டாய் நெக்ஸோ சிறந்த மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக, தூய்மையான காற்றும் பசுமை வீடு விளைவுகளின்கீழ் செய்யப்பட்ட ஆய்வில் முழு மதிப்பெண்களையும் நெக்ஸோ பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதேபோன்று, செயல்திறன் குறித்த ஆய்விலும் குறைகூட முடியாத அளவிற்கு நல்ல மதிப்பீட்டையே இக்கார் பெற்றிருக்கின்றது. எனவேதான், ஐந்திற்கு ஐந்து நட்சத்திரம் என்ற தர மதிப்பை கிரீன் என்சிஏபி நெக்ஸோவிற்கு வழங்கியிருக்கின்றது.

இதுபோன்ற நற்சான்றை கிரீன் என்சிஏபியிடம் இருந்து ஹூண்டாய் பெறுவது முதல் முறையல்ல. முன்னதாக கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் ஆகிய கார்களும் நல்ல மதிப்பீட்டையேப் பெற்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இவையும் ஐந்திற்கு ஐந்து என்ற நட்சத்திர ரேட்டிங்கையேப் பெற்றன.

இந்த நிலையிலேயே ஹூண்டாய் நெக்ஸோ காரும் பசுமை மற்றும் தூய்மை விவகாரத்தில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று ஹூண்டாய் நிறுவனத்திற்கு நற்மதிப்பை பெற்று தந்திருக்கின்றது. இந்தியாவில் இக்கார் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும், இந்தியர்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காரை காட்சிப்படுத்தியது.

ஹூண்டாய் நெக்ஸோ ஓர் எஸ்யூவி க்ராஸோவர் ரக காராகும். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளின் அக்ஷயபாத்திரமாக இக்கார் இருக்கின்றது. இந்த காரில் 95kW ஹைட்ரஜன் ஃஃப்யூவல்செல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் 40kW பேட்டரியில் சேமிக்கப்பட்டு மின் மோட்டாருக்கு வழங்கப்படும். இதில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவர் மற்றும் 396 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றக்கூடியது.

அதேசமயம், இக்காரில் ஒரு முறை முழுமையாக ஃஃப்யூவல் செல்லை (ஹைட்ரஜன்) நிரப்பினால் சுமார் ஆயிரம் கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இத்தகைய திறனை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே வாகன ஆர்வலர்கள் பலர் இக்காரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது மின்சார கார்களுக்கு மிக சிறந்த மாற்றாக இருக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








