6 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்கும் ஹூண்டாய்... ரூ.4,000 கோடியில் மிகப்பெரிய திட்டம்!
6 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியில் மிகப்பெரிய திட்டத்தையும் வகுத்துள்ளது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சந்தையில் இன்னும் கால் பதிக்காத நிலையில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து எதிர்கால சந்தையை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அந்த வகையில், வரும் 2028ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

வெவ்வேறு வகை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஹேட்ச்பேக், எஸ்யூவி, செடான் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் இந்த எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டம் போட்டுள்ளது.

E-GMP என்று குறிப்பிடப்படும் மின்சார கார்களுக்கான அந்நிறுவனத்தின் பிரத்யேகமான கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய எலெக்ட்ரிக் கார்கள்உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால், தற்போதைய எலெக்ட்ரிக் கார்களின் கட்டமைப்பிலிருந்து இது முற்றிலும் அதி நவீனமான வடிவமைப்பு மற்றும் சிறப்புகளுடன் கட்டமைக்கப்படும்.

எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி இந்தியாவில் அறிமுகம் செய்வதோடு, அதற்கு உரிய அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதற்கான திட்டத்தையும் ஹூண்டாய் வைத்துள்ளது. இதற்காக, சார்ஜ் ஏற்றும் வசதியை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

விலையை வெகுவாக கட்டுக்குள் வைக்கும் வகையில், புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான உதிரிபாகங்களை பெரும்பாலும் இந்தியாவிலேயே பெறுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதனால், போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக வளர்ந்து புரட்சிகரமான பாதையில் செல்லத் துவங்கி இருக்கிறது. அதே பாணியில் அடுத்த சில ஆண்டுகளில் மின்சார கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சந்தை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தக்கவாறு தங்களின் வர்த்தக கொள்கைகளை பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிகப்பெரிய திட்டத்துடன் களமிறங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








